மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவரின் ஆட்டம் தொடர்ந்து மோசமாக இருந்து வரும் சூழலில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர பவுலர் ஒருவருக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்.19 முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராக தொடங்கியுள்ளனர். இந்திய அணியின் கவனமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒயிட் பால் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

வரும் 22ஆம் தேதி முதல் டி20 தொடரும், பிப்.6 முதல் ஒருநாள் தொடரும் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. உலகக்கோப்பை தொடரில் ஆடிய வீரர்களுடன் சில இளம் வீரர்களுக்கும் சேர்த்து வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஜஸ்பிரிட் பும்ரா நியமனம் செய்யப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. 2022 முதலே இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் பும்ரா இருந்து வருகிறார். அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளிலும் பும்ரா தான் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தினார்.
அதேபோல் கேப்டனாக இருக்கும் போதும் கூட எந்த அழுத்தமும் இல்லாமல் பும்ராவின் செயல்பாடுகள் உச்சத்தில் இருந்தது. 9 இன்னிங்ஸில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ரோஹித் சர்மாவுக்கு உதவியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ராவுக்கு துணைக் கேப்டன் பதவியை அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரின் போது இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் துணைக் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டதில் இருந்தே சுப்மன் கில்லின் ஆட்டம் மோசமாகவே இருந்து வருகிறது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என்று எந்த வடிவதிலும் ரன்களை சிறப்பாக சேர்க்கவில்லை.
இதனால் சுப்மன் கில்லுக்கு பதிலாக இந்திய அணியின் துணைக் கேப்டனாக பும்ராவை நியமிப்பதே சரியாக இருக்கும் என்று பிசிசிஐ கருதியுள்ளது. ஏனென்றால் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் பும்ரா என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் அவருக்கான முக்கியத்துவம் ஒயிட் பால் கிரிக்கெட்டிலும் அளிக்கப்பட வேண்டும் என்பதே பிசிசிஐ எண்ணமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.