கிறிஸ்ட்சர்ச்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த 35 ஆண்டுகால சாதனையை, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் கீமர் ரோச் ஜோடி முறியடித்துப் புதிய வரலாறு படைத்துள்ளது. தோல்வியின் விளிம்பில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, இந்த ஜோடி தங்களது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் காப்பாற்றி போட்டியை டிரா செய்தது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் 5-ம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடிக் கொண்டிருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 4-வது இன்னிங்ஸில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மனோஜ் பிரபாகர் தன்வசம் வைத்திருந்தனர். 1990-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற போட்டியில், இந்த ஜோடி 160 ரன்கள் குவித்து போட்டியை டிரா செய்தது.
சுமார் 35 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்தச் சாதனையை, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் கீமர் ரோச் ஜோடி முறியடித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இவர்கள் 7-வது விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தனர்.
ஜஸ்டின் கிரீவ்ஸ் & கீமர் ரோச் (வெஸ்ட் இண்டீஸ்) - 180 ரன்கள் (எதிர்: நியூசிலாந்து, 2025)
சச்சின் டெண்டுல்கர் & மனோஜ் பிரபாகர் (இந்தியா) - 160 ரன்கள் (எதிர்: இங்கிலாந்து, 1990)
ரிச்சி பெனாட் & ஆலன் டேவிட்சன் (ஆஸ்திரேலியா) - 134 ரன்கள் (1960)
வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாகத் தோற்றுவிடும் என்று எதிர்பார்த்த நியூசிலாந்துக்கு, இந்த ஜோடி சிம்மசொப்பனமாக விளங்கியது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகக் களத்தில் நின்ற இவர்கள் 400-க்கும் மேற்பட்ட பந்துகளைச் சந்தித்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை விரக்தியடையச் செய்தனர்.
ஜஸ்டின் கிரீவ்ஸ் 6-வது வீரராகக் களமிறங்கி, நங்கூரம் போல நிலைத்து நின்று 388 பந்துகளைச் சந்தித்தார். 19 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 202 ரன்கள் குவித்து தனது முதலாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார்.
கீமர் ரோச் ஒரு முழு நேர பந்துவீச்சாளராக இருந்த போதும் கிரீவ்ஸ்க்குத் துணையாக 233 பந்துகளைச் சந்தித்து 58 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது இவரது முதல் அரைசதம் ஆகும்.
இவர்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தால், நியூசிலாந்தின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. போட்டி டிராவில் முடிவடைந்தது. சச்சினின் சாதனையை முறியடித்த இந்த ஜோடிக்குக் கிரிக்கெட் உலகம் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறது.