கொழும்பு: இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் முரளி விஜய், விருத்திமான் சஹா ஆகியோருக்குப் பதில் கருண் நாயரும், நமன் ஓஜாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் ஓஜா விக்கெட் கீப்பர் ஆவார். கருண் நாயர் பேட்ஸ்மேன். ஓஜா மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். நாயர், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்.
முரளி விஜய்யும், விருத்திமான் சஹாவும் காயமடைந்துள்ளதால் அவர்கள் 3வது போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் நாயரும், ஓஜாவும் இணைகிறார்கள்.
2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 2வது இன்னிங்ஸின்போது பாதி ஆட்டத்திற்கு மேல் சஹாவுக்குப் பதில் ராகுல்தான் கீப்பிங் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல முரளி விஜய்யுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் சரிவர குணமாகவில்லை. இந்த நிலையில் 2வது போட்டியில் ஆடினார். தற்போது காயம் குணமடைய மேலும் ஓய்வு தேவைப்படுவதால் அவர் 3வது போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முரளி விஜய் காலே டெஸ்ட் போட்டியில் முழுமையாக ஆடவில்லை. 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடாத அவர் 2வது இன்னிங்கில் 82 ரன்களைக் குவித்திருந்தார்.