மும்பை : இந்தியா, இலங்கை அணிகள் மோதிய டி20 மற்றும் ஒரு நாள் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் நினைத்த நிலையில், அது புஷ்வானமாக மாறியது பிசிசிஐயை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை தழுவியது. விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் அந்தத் தொடர் ரசிகர்களின் கவனத்தை ஏன் ஈர்க்கவில்லை என்ற சந்தேகம் பிசிசிஐயிடம் இருந்தது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், நான் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் நான் ஒரு பந்தை கூட பார்க்கவில்லை. ஏனென்றால் என் கவனம் அனைத்தும் ஒலிம்பிக் போட்டிகள் மீது தான் இருந்தது.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது உங்களுடைய ஒட்டுமொத்த கவனமும் அதில் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இது உலகின் சிறந்த விளையாட்டுத் தொடராகும். சில சமயம் நாம் வெற்றி பெறலாம். சில சமயம் நாம் தோற்கலாம். விளையாட்டில் இது அனைத்துமே சகஜம் தான். அனைத்து கிரிக்கெட் வீரர்களுமே இப்படி ஒரு நிலையில் கடந்து சென்று ஆக வேண்டும்.
நீங்கள் சிறப்பாக விளையாடும் சில சமயம் உங்களால் வெற்றி பெற முடியாது என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். கிரிக்கெட் போட்டிக்கு தான் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆதரவளிப்பார்கள். ஒலிம்பிக் போன்ற விளையாட்டு தொடரில் கவனம் இருக்காது என்று குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஹர்பஜன் சிங் தாம் ஒரு பந்தை கூட இந்தியா இலங்கைத் தொடரில் பார்க்கவில்லை.முழுக்க முழுக்க ஒலிம்பிக் போட்டிகளை தான் பார்த்தேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியா ஒற்றை விளையாட்டு மட்டும் கவனம் செலுத்தாமல் மற்ற விளையாட்டிலும் தங்களது பார்வையை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.