சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தடை விதிக்கப்பட்டபோது டோணி எங்கிருந்தார் தெரியுமா?
பொக்காரோ, ஜார்க்கண்ட்: ஐபிஎல் போட்டிகளிலிருந்து 2 ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தடை விதிக்கும் உத்தரவை நீதிபதி ஆர்.எம். லோதா கமிட்டி அறிவித்த அதேசமயத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளோடு பிள்ளையாக அமர்ந்து பாடம் கவனித்துக் கொண்டிருந்தாராம் சென்னை அணியின் கேப்டன் டோணி.
மாணவர்களோடு அமர்ந்து பேசி, அவர்களது பாடத்தைக் கவனித்து அவர்களுக்கு கிரிக்கெட் குறித்த போதனையையும் வழங்கிக் கொண்டிருந்தாராம் டோணி.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பொக்காரோ நகரில் உள்ள வகுப்பில்தான் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.

2 ஆண்டு தடை
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட 2 ஆண்டு தடை விதித்து நேற்று லோதா கமிட்டி உத்தரவிட்டது.

கேப்டன் எங்கே
இந்த பரபரப்பான தீர்ப்பால் நாடு முழுவதும் நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் குழப்பமடைந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாமல் ஐபிஎல் போட்டியா என்றும் வாதப் பிரதிவாதங்கள் களை கட்டியிருந்தன. அந்த சமயத்தில் கேப்டன் டோணி பொக்காரோ பள்ளிக் கூடத்தில் இருந்திருக்கிறார்.

டெல்லி பப்ளிக் ஸ்கூல்
பொக்காரோவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்குச் சென்ற கேப்டன் டோணி அங்கு மாணவர்களிடம் உரையாடினார். கிரிக்கெட் குறித்துப் போதித்தார். அவர்கள் பாடத்தைக் கவனிப்பதை உடன் இருந்து பார்த்தார். பின்னர் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

தொடர்ந்து வருவேன்
மாணவர்களிடையே அவர் பேசுகையில், வகுப்புகளுக்கு தினசரி தவறாமல் செல்லுங்கள். நன்றாகப் படியுங்கள். உங்களுக்குக் கிரிக்கெட் கற்றுத் தர நான் தொடர்ந்து இங்கு வருவேன் என்றார் டோணி.
கஷ்டமான சமயத்திலும் கூட கலங்காமல் கலகலப்பாக இருப்பது நம்ம டோணி மட்டுமே!


Click it and Unblock the Notifications