மும்பை - இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இன்று மறக்க முடியாத நாள்.. மகிழ்ச்சியும், சோகமும் கலந்த ஒரு நாள் தான் இன்று. இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் என்றால், அதன் கடவுள் சச்சின் டெண்டுல்கர் என்பது தான் நம் நாட்டில் எழுதப்படாத விதி.. அப்படிப்பட்ட சச்சின் இந்தியாவுக்காக முதலும், கடைசியுமாக விளையாடிய தினம் தான் இன்று.
1989ஆம் ஆண்டு 16 வயதான இளம் சிறுவனாக இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்தார் சச்சின் டெண்டுல்கர். இதே நாள் 1989ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் சச்சின்.. "என்னங்க.. சின்ன பையனை கிரிக்கெட் விளையாட அழைச்சிட்டு வந்திருக்கீங்க"..?? என்று பாகிஸ்தான் வீரர்கள் நக்கலாக கேட்க, அன்று யாருக்கும் தெரியவில்லை இந்த சிறுவன் தனக்கென்று அழிக்க முடியாத ஒரு இடத்தை உருவாக்கப் போகிறான் என்று..??

வக்கார் யூனிஸ், வாசிம் அக்ராம், இம்ரான் கான் ஆகியோரின் அசுர வேகப்பந்துவீச்சை எதிர்கொண்ட சச்சின் முதல் இன்னிங்சில் 15 ரன்கள் எடுத்தார். டக் அவுட் ஆகிவிடுவான் என்று எதிர்பார்த்தோம், ஆனால் 15 ரன் எடுத்து விட்டானே என்று பாகிஸ்தான் வீரர்கள் நினைப்பதற்குள் அடுத்த டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசி கிரிக்கெட் உலகில் தன்னை அறிமுகம் செய்து கொண்டார் சச்சின் டெண்டுல்கர்.
இதன் பின், இங்கிலாந்து மண்ணில் இளம் வயதிலே சதம் விளாசி சாதனை, பெரிய பெரிய ஜாம்பவான்களே திணறும் ஆஸ்திரேலியாவின் பெர்த் மண்ணில் சதம் என சாதனைகளை தொடர்ந்தார் சச்சின் டெண்டுல்கர்.
இந்த பையனை பார்க்கும் போது நான் விளையாடுவதை பார்க்கிற மாதிரி இருக்கு என கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், தனது மனைவியிடன் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் சச்சின் விக்கெட்டை வீழ்த்தினால், இந்தியாவை வீழ்த்திவிடலாம் என மற்ற அணி வீரர்கள் என்று நினைக்கும் அளவுக்கு மாறினார் சச்சின்.
சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதம், அதிக ரன்கள், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம், அதிக ரன்கள், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது, சிறந்த விளையாட்டு வீரருக்கான கேல் ரத்னா விருது, நாட்டிலேயே உயரிய விருதான பாரத் ரத்னா விருது என அனைத்து விருதுகளும் சச்சினை வந்து சேர்ந்தது.
பல்வேறு சாதனைகளை படைத்த சச்சின் இதே நாளில் 2013ஆம் ஆண்டு தனது 200வது மற்றும் கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியில் சொந்த ஊரான மும்பையில் களமிறங்கினார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடைசியாக பேட்டிங் செய்த சச்சின் 74 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். சச்சின் கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் செய்து பெவிலியன் திரும்பிய போது நாடே கண்ணீர்விட்டது.
இதனை நினைவுகூரும் விதமாக பி.சி.சி.ஐ. டிவிட்டரில் சச்சினின் முதல் மற்றும் கடைசி டெஸ்ட்டின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. இதனை பகிர்ந்து வரும் ரசிகர்கள் சச்சினை மிஸ் செய்வதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.