
வேகப்பந்துவீச்சு
உலகக் கோப்பை வரலாற்றில் அப்போது 3வது முறையாக இரு அணிகளும் மோதின. 2 முறை மோதிய போதும் இந்தியா வென்றது. ஆனால் மூன்றாவது முறை அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று பல கிரிக்கெட் விமர்சகர்களும் நம்பினர். காரணம், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சென்சூரியன் ஆடுகளத்தில் போட்டி நடந்தது.

274 ரன்கள் இலக்கு
அது மட்டுமல்லாமல் வசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர் என உலகின் மூன்று சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களும் பாகிஸ்தான் பிளேயிங் லெவனில் இருந்தனர். டாஸ் வென்ற பாகிஸ்தானும் முதலில் பேட் செய்து 273 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை, இந்தியா துரத்துவது கனவிலும் நடக்காத விசயம் என்று பலரும் எண்ண தொடங்கினர்.

சச்சினின் சிக்சர்
ஆனால், நடந்ததோ வரலாற்றில் இடம் பிடித்த தருணம். எப்போதும் முதல் பந்தை எதிர்கொள்ளும் சேவாக்கிடம். இன்று நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறிய சச்சின் ஆட்டத்தில், அக்ரம்மின் 3வது பந்தையே பவுண்டரிக்கு விளாசினார். இதே போன்று அக்தர் வீசிய 2வது ஓவரில் முதல் பந்தே 150 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்தது, இதனை எப்படி டா சச்சின் எதிர்கொள்ள போகிறார் என்று பலரும் நினைத்த வேலையில் தான், மூன்றாவது பந்தில் சச்சின் Third man திசையில் சிக்சர் அடித்ததை கண்டு கிரிக்கெட் ரசிகர்களே அதிர்ந்து போனார்கள்.

ரவி சாஸ்த்ரி வர்ணனை
அப்போது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த ரவி சாஸ்த்ரி, யாரேனும் ஏதேனும் வேலையில் இருந்தீர்கள் இல்லை உணவருந்தி கொண்டு இருந்தீர்கள் என்றால் அதனை அப்படியே விட்டு, சச்சின் ஆட்டத்தை பாருங்கள் என்று கூறினார். அத்துடன் சச்சின் நிறுத்தவில்லை அடுத்த 2 பந்துகளிலும் பவுண்டரிக்கு விளாசினார்.

98 ரன்கள்
சச்சின் அதிரடியால் இந்திய அணி 5.2வது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. சச்சின் 37 பந்தில் அரைசதம் அடித்தார். அப்போது கேப்டன் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரமை பந்துவீச அழைக்க, அடபோ பா,, அவர் பேயாட்டம் ஆடுகிறார் என்னால் முடியாது என்று கூறிய நிகழ்வும் நடைபெற்றது. இறுதியாக சச்சின் 75 பந்துகளில் 98 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

ஒரு ஒற்றுமை
இதனால் வெற்றி பெறவே வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட போட்டியில் இந்தியா வென்றது. இன்றும், அன்றைய தினமும் ஒரு ஒற்றுமை உண்டு என்பது தான் ஆச்சரியம். இன்றும் சிவராத்திரி தான், இந்தப் போட்டி நடைபெற்ற நாளும் சிவராத்திரி தான். சச்சின் பாகிஸ்தான் வீரர்களுக்கும், அதன் ரசிகர்களுக்கும் சிவராத்திரியை முன்னிட்டு தூங்கா இரவை பரிசளித்தார். இதன் முழு போட்டியும் யூ டியூபில் இன்றும் கிடைக்கிறது. வேண்டும் என்றால் ஒரு முறை, சச்சின் முழு ஆட்டத்தையும் பார்த்து, தூங்கமல் இருக்கலாம். உலககோப்பை வரலாற்றில் சச்சினின் இந்த ஆட்டம் தான் சிறந்த ஆட்டம் என்று பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களும் கூறுவது உண்டு.


Click it and Unblock the Notifications