சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கேகேஆர் அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 144 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய கே கே ஆர் அணி 33 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் எடுத்து கே கே ஆர் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். முதலில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்தது.மேலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது.

இதனால் 144 ரன்கள் போதுமானது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் கே கே ஆர் அணி வீரர்கள் பேட்டிங் செய்யும்போது பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது. இந்த மாற்றம் பனிப்பொழிவால் நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து தற்போது நிதிஷ் ரானா அளித்துள்ள விளக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து பேசிய அவர், இந்த வெற்றிக்கு என்னுடைய பயிற்சியாளர் சந்திரகாந்த் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஏனென்றால் நாங்கள் பேட்டிங் செய்வதற்கு முன்பு அவர் பெரிய ரோலரை ஆடுகளத்தில் பயன்படுத்த கூறினார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. ஏனென்றால் பெரிய ரோலரை பயன்படுத்தினால் ஆடுகளம் இன்னும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிவிடும் என நான் பயந்தேன். ஆனால் அவர் என் பேச்சைக் கேட்கவில்லை. கடைசியில் அவர் கொடுத்த ஐடியாவால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் நான் எதிர்பார்த்தபடி பந்து திரும்பவே இல்லை. இது எங்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது. இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய மூன்று பிரிவினரும் சிறப்பாக செயல்பட்டார்கள். இதனால் நாங்கள் எளிதாக வெற்றி பெற்று விட்டோம். இன்னும் கடைசி ஆட்டத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நினைக்கிறேன். அனைத்து அணியினருக்கும் சொந்த மைதானத்தில் விளையாடும் போது சாதகமான நிலை இருக்கிறது. ஆனால் எங்களுக்கு மட்டும் அப்படி இல்லை என நிதிஷ் ரானா கூறினார்.