டெல்லி: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் ஓய்வு பற்றிய கேள்விக்கு அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சென்னை அணி விளையாட உள்ளது. டெல்லி அணி ஏற்கனவே ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், சென்னை அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதியாகும்.

இல்லையென்றால் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் தோல்வியடைந்தால் மட்டுமே சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். இதனால் சென்னை அணி ரசிகர்களிடையே இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுதானா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு மைக் ஹசி, இதுநாள் வரை தோனியின் ஓய்வு பற்றி நாங்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை. தோனி அவரின் கடைசி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறாரா என்பதும் யாருக்கும் தெரியாது. ஆனால் தோனி சிக்சர் விளாசி, ஆட்டத்தை முடிக்கிறார். ஒரு பேட்டிங் பயிற்சியாளராக தோனி இப்போதும் சிறப்பாக விளையாடுகிறார். இன்னும் உத்வேகத்துடன் பயிற்சியில் ஈடுபடுகிறார். தோனியால் இப்போதும் இமாலய சிக்சர்களை அடிக்க முடிகிறது. சென்னை அணிக்கு அவரால் இப்போதும் பேட்டிங்கில் பங்களிப்பது அவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.

அதனால் அவர் ஐபிஎல் தொடரை தொடர்ந்து விளையாடலாம். இன்னும் 5 ஆண்டுகள் கூட விளையாட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் தோனியின் ஓய்வு முடிவு அவரிடம் மட்டுமே உள்ளது. தோனிக்கான திட்டம் மிகவும் வெளிப்படையானது. கடைசி ஓவரில் தான் களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அதிகமாக 2 ரன்களை ஓட முடியாது. அது அவரின் கால்களுக்கு கூடுதல் அழுத்தத்தை உண்டாக்கும். தோனியின் ஓய்வு பற்றி தெரிந்த ஒரே மனிதன், தோனி மட்டும் தான் என்று தெரிவித்தார்.