டாக்கா: பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் சல்மான் ஆகாவின் சர்ச்சைக்குரிய ரன் அவுட் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய வங்கதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், "நாங்கள் இங்கு சேவை செய்யும் நோக்கத்தில் லீக் போட்டிகளில் விளையாட வரவில்லை" என தடாலடியாக பதிலளித்துள்ளார்.
டாக்காவில் மார்ச் 13 அன்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 39வது ஓவரில் விளையாடிய போது இந்த சர்ச்சை அரங்கேறியது. முகமது ரிஸ்வான் அடித்த பந்தை வங்கதேச கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் தடுக்க முயன்றார். அப்போது பந்து சல்மான் ஆகா அருகில் சென்றது. அவர் கிரீஸை விட்டு சற்று வெளியே நின்றபடி, பந்தை எடுத்து மெஹிதி ஹசனிடம் திருப்பிக் கொடுக்க முயன்றார். ஆனால் அதை சாதகமாகப் பயன்படுத்திய மெஹிதி ஹசன் உடனடியாக ரன் அவுட் செய்தார். 62 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்த சல்மான் ஆகா விதிமுறைகளின்படி அவுட் என நடுவர் அறிவித்தார்.

இந்த ரன் அவுட் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என வர்ணனையாளராக இருந்த முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய லிட்டன் தாஸ், "இது ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி, யாரும் இங்கு சேவை செய்யும் நோக்கத்தில் லீக் போட்டிகளில் விளையாட வரவில்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இந்த விக்கெட் வீழ்த்தப்பட்டுள்ளது. எனவே இதில் விளையாட்டு உணர்வு மீறப்பட்டதாக நான் எந்த கோணத்திலும் கருதவில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ஒரு வீரராக, அவுட் என்றால் அது அவுட் தான்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்துப் பேசிய சல்மான் ஆகா, மெஹிதி ஹசன் செய்தது சட்டப்படி சரி என்றாலும், அவர் இடத்தில் தான் இருந்திருந்தால் விளையாட்டு உணர்வுடன் நடந்து கொண்டிருப்பேன் எனத் தெரிவித்திருந்தார். களத்தில் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
