நியூயார்க் : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்தியது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என்று பாகிஸ்தான் பவுலர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் கனவா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை பாகிஸ்தான் அணி பதிவு செய்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இந்தியா அணிகளுடன் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததால், அமெரிக்கா அணியின் தோல்வியை பொறுத்தே சூப்பர் 8 வாய்ப்பு அமையும்.

கனடா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட முகமது அமீர்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 4 ஓவர்களை வீசிய முகமது அமீர், 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார் முகமது அமீர்.
இவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் பாகிஸ்தான் அணியின் பவுலிங் கூடுதல் பலம் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற முகமது அமீரை, இந்திய ஜாம்பவான்களான ஹர்பஜன் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இருவரும் பேட்டி எடுத்தனர். அப்போது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று நவ்ஜோத் சிங் சித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு முகமது அமீர், 2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்தியது தான் என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம். கம்ரான் அக்மலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறுவார். அந்த போட்டியில் இந்திய அணிக்காக ஹர்பஜன் சிங்கும் விளையாடி இருந்தார். அதேபோல் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு பயிற்சி ஆட்டத்தின் போது பிரையன் லாராவுக்கு பவுலிங் செய்ததை மறக்கவே முடியாது என்று தெரிவித்தார்.
இது இந்திய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஏனென்றால் சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கி வெளியேறிய முகமது அமீர், சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பினார். 2017 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் அணி வென்றதற்கு முக்கியமான காரணமாகவும் அமைந்தார். ஆனால் பாகிஸ்தான் அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காததால் திடீரென ஓய்வை அறிவித்து வெளியேறினார். தற்போது மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பியுள்ள அவர், சிறப்பாக பவுலிங் செய்து எதிரணிகளை திணறடித்து வருவது குறிப்பிடத்தக்கது.