கொழும்பு: கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. கொழும்பில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்து சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகக்கோப்பையில் களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி, தனது முதல் போட்டியிலேயே டாஸ் வென்றது. இந்தப் போட்டிக்கான பிட்ச் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. பொதுவாக இலங்கை பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், இந்த பிட்ச் புற்கள் நிறைந்து காணப்பட்டது. எனவே, வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்ற பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, பந்துவீச்சைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை விளக்கினார். "இது ஒரு புதிய ஆடுகளம், மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்த விரும்புகிறோம். நான் இலங்கையில் இவ்வளவு புற்கள் உள்ள ஆடுகளத்தை இதற்கு முன் பார்த்ததே இல்லை. மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்களுடன் களமிறங்குகிறோம். நெதர்லாந்து ஒரு நல்ல அணி, எங்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த முயற்சிப்போம்" என்றார்.
நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேசுகையில், "இது பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும் ஆடுகளம். நாங்களும் பந்துவீசவே விரும்பினோம், ஆனாலும் முதலில் பேட்டிங் செய்வது குறித்துப் பெரிய கவலை இல்லை. கடந்த ஒன்றரை மாதங்களாக நாங்கள் இந்தியா மற்றும் இலங்கையில் பயிற்சி செய்து வருகிறோம். அதனால் இங்குள்ள சூழலுக்கு நாங்கள் பழகிவிட்டோம். எங்கள் அணியில் நிறைய ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார்.
இது உலகக்கோப்பையின் முதல் போட்டி எனும் நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் சிறிய அளவிலான துவக்க விழா நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பள்ளி மாணவர்கள் இரு நாட்டு தேசியக் கொடிகளையும் ஏந்தி அணிவகுத்து நின்றனர். மைதானத்தின் டிஜே அதிரடியான இசையை ஒலிக்கச் செய்து ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார்.
இதில் மிகவும் சுவாரஸ்யமாக, ஜெட் பேக் போன்ற கருவியில் பறந்தபடி ஒருவர் உலகக்கோப்பையை மைதானத்திற்குள் கொண்டு வந்தது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. இந்தப் போட்டிக்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை எப்போதும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இம்முறை இளம் வீரர் சயிம் அயூப் மற்றும் கேப்டன் சல்மான் ஆகா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இருப்பினும் அனைவரின் பார்வையும் மூத்த வீரர் பாபர் அசாம் மீதே உள்ளது.
இந்தத் தொடரில் அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கும் பொறுப்பு பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்த விவாதங்கள் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புற்கள் நிறைந்த ஈரப்பதமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நெதர்லாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் (ஆடும் லெவன்): சைம் அயூப், சாஹிப்ஸாதா ஃபர்ஹான், சல்மான் ஆகா(கேப்டன்), பாபர் அசாம், உஸ்மான் கான்(விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷாஹீன் அஃப்ரிடி, சல்மான் மிர்சா, அப்ரார் அகமது.
நெதர்லாந்து (ஆடும் லெவன்): மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீடே, கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), சாக் லயன் கேச், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வ், ஆர்யன் தத், கைல் க்ளைன், பால் வான் மீகெரென்.