துபாய்: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பை பறிக்கும் வகையில் பாகிஸ்தான் மகளிர் அணி நியூசிலாந்து அணியிடம் வேண்டும் என்றே தோல்வி அடைந்ததா? என்ற சர்ச்சை வெடித்து இருக்கிறது. 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று உள்ளன.
இந்த பிரிவில் ஆஸ்திரேலியா, தான் ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது. மீதமிருந்த ஒரு அரை இறுதி இடத்துக்கு பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய மூன்று அணிகள் இடையே போட்டி நிலவியது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன போட்டி தான் அந்த குரூப்பின் கடைசி போட்டியாகும்.

அதில் பாகிஸ்தான் அணி குறைவான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. பாகிஸ்தான் மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை நெட் ரன் ரேட் அடிப்படையில் முந்தி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.
ஆனால், பாகிஸ்தான் அணி பலவீனமாக இருந்த நிலையில் பெரிய வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை என்றே கருதப்பட்டது. அதே சமயம், பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை அணியை போராடி வீழ்த்தி விட்டால் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பதால் இந்திய ரசிகர்களும் இந்த போட்டியை ஆவலுடன் பார்த்தனர். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
துபாயில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்து அணி மிக மோசமாக பேட்டிங்கில் தடுமாறியது. அந்த அணியின் ரன் ரேட் 5-ஐ ஒட்டியே இருந்தது. அந்த சமயத்தில் பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது. முதலில் சில பவுண்டரிகளை மோசமான ஃபீல்டிங்கால் விட்டுக் கொடுத்திருந்தது பாகிஸ்தான்.
அதன் பின் பாகிஸ்தான் ஃபீல்டர்கள் வரிசையாக கேட்ச்களை விட ஆரம்பித்தனர். ஒரே இன்னிங்ஸில் 8 கேட்ச்களை பாகிஸ்தான் வீராங்கனைகள் கோட்டை விட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். வெற்றி பெற்றே ஆக வேண்டிய உலகக் கோப்பை போட்டியில் ஒரு அணி இதுவரை இல்லாத அளவுக்கு கேட்ச்களை தவற விட்டது சந்தேகத்தை கிளப்பியது.
பின்னர் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து இருந்தது. ஒருவேளை பாகிஸ்தான் சரியாக ஃபீல்டிங் செய்து ரன்களை கட்டுப்படுத்தி கேட்ச்களை சரியாகப் பிடித்திருந்தால் நியூசிலாந்து அணி 70 - 80 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கும். அடுத்து 111 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடியது.
அந்த அணியில் இரண்டு வீராங்கனைகள் மட்டுமே 10 ரன்களை தாண்டி ரன் சேர்த்தனர். முனிபா அலி 15 ரன்களும், கேப்டன் ஃபாத்திமா சனா 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். 28 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட் இழந்து இருந்தது பாகிஸ்தான அணி. அதன் பின் ஃபாத்திமா சனா ஓரளவு ரன் சேர்த்து வந்தார். பாகிஸ்தான் அணி 52 ரன்கள் எடுத்து இருந்தபோது 6 வது விக்கெட் வீழ்ந்தது. பின்னர் 56 ரன்களில் அந்த அணி ஆல் அவுட் ஆகிவிட்டது.
கடைசி நான்கு விக்கெட்டுகள் வெறும் 4 ரன்களில் பறிபோனதும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. பாகிஸ்தான் இந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அரை இறுதிக்கு முன்னேறியது. இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு பறிபோனது. பாகிஸ்தான் வீராங்கனைகள் ஐந்து விக்கெட் வீழ்ந்த நிலையில் ஓய்வறையில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.
மகளிர் டி20 உலககோப்பை: வாழ்வா சாவா ஆட்டத்தில் ஆஸியிடம் இந்தியா தோல்வி
இவை அனைத்தையும் முடிச்சுப் போட்டு பார்க்கும்போது பாகிஸ்தான் அணி வேண்டுமென்றே இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறக்கூடாது என்பதற்காக இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அணியின் செயலை சுட்டிக் காட்டி இந்திய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.