ட்ரினிடாட்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான பாபர் அசாமை, கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெறும் 3 பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட் ஆனதே இந்த கடும் விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
பாகிஸ்தான் அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் இரண்டாவது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தடுமாறியது.

அணியின் முக்கிய வீரரான பாபர் அசாம், 9வது ஓவரில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத பாகிஸ்தான் அணி, மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் தட்டுத் தடுமாறி ஆடியது. இறுதியில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 1-1 என சமன் செய்தது.
பாபர் அசாமின் இந்த மோசமான ஆட்டம், ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் அவரை "ஓவர்ரேட்டட்" (அதிகம் புகழப்பட்ட வீரர்) என்று கடுமையாகச் சாடி வருகின்றனர். குறிப்பாக, ஜிம்பாப்வே, நேபாளம் போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக மட்டுமே பாபர் அசாம் ரன்களை குவிப்பார் என்றும், வலுவான அணிகளுக்கு எதிராகச் சொதப்பிவிடுவார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
"நேபாளம் இல்லைனா, பாபருக்கு பார்ட்டி இல்லை" ('No Nepal, no party for statpadder') என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு, அவரை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாபர் அசாம் கடைசியாக 2023 ஆசிய கோப்பையில் நேபாளம் அணிக்கு எதிராகவே சதம் அடித்திருந்தார் என்பதை சுட்டிக்காட்டி, அதன்பிறகு ஒரு சதம் கூட அடிக்கவில்லை என ரசிகர்கள் புள்ளிவிவரங்களுடன் விமர்சித்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள், "சதத்தை வெறும் 100 ரன்களில் தவறவிட்டுவிட்டார் பாபர் அசாம்" என கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.
முதல் ஒருநாள் போட்டியில் 47 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியிருந்தாலும், இந்த இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆகி அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது, பாபர் அசாம் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.