மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஏறக்குறைய அரை இறுதிச் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒரு வேளை முதலில் பந்து வீச நேர்ந்தால் மூன்று ஓவர்களில் எல்லாம் இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை எட்ட வேண்டும்.
இதனால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளருடன் பேசிய பாபர் அசாம் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் நாங்கள் தொடரை சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடுகிறோம்.

ரன் ரேட்டை அதிகரிக்க எங்களிடம் ஒரு திட்டம் இருக்கிறது. அதனை இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் செயல்படுத்த முயற்சி செய்வோம். முதலில் நாங்கள் பத்து ஓவர் பொறுப்பாக விளையாடி அங்கிருந்து எந்த இலக்கை தொட முடியும் என்பது குறித்து யோசிப்போம். எங்கள் அணியின் பக்கர் சாமான், ஒரு 20, 30 ஓவருக்கு நின்று விளையாடிவிட்டால் எங்களுக்கு என்ன வேண்டுமோ அதை அடைந்து விடுவோம் என்று நினைக்கிறேன்.
இதேபோன்று இப்திகார் அஹமத் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் செயல்பாடும் மிகவும் முக்கியமாகும். நான் என்னுடைய கேப்டன்சி குறித்து எல்லாம் யோசிக்கவே இல்லை. கேப்டனாக இருப்பது குறித்து பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம். என்னுடைய குறிக்கோள் எல்லாம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதில்தான் இருக்கிறது.
போட்டியின் சூழலுக்கு ஏற்ப தான் நாங்கள் விளையாடுகிறோம். சில சமயம் நாங்கள் அதிரடியாக விளையாட ஏதுவான சூழல் அமைவதில்லை. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கிரிக்கெட் மைதானமும் ஒவ்வொரு விதத்தில் செயல்படுகிறது. நாங்கள் இந்தியாவுக்கு முதல் முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம். இந்திய ஆடுகளங்கள் எப்படி செயல்படும் என்று எங்களுக்கு தெரியாது. என் மீது உள்ள எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று பாபர் அசாம் கூறியுள்ளார்.