ஐதராபாத்: பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள இரு உலகக்கோப்பை போட்டியிலும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இடையிலான ஒப்பீடு அதிகரித்து வருகிறது. அதற்கு விராட் கோலியின் சில சாதனைகளை பாபர் அசாம் முறியடித்ததும் காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் மிஸ்பா உல் ஹக்கிற்கு பின் பாகிஸ்தான் அணியின் முகமாக பாபர் அசாம் மாறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 110 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் மொத்தமாக 5,424 ரன்களை விளாசி இருக்கிறார். அதில் 19 சதங்களும், 28 அரைசதங்களும் அடங்கும். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 49 போட்டிகளில் விளையாடி 9 சதங்கள், 26 அரைசதங்கள் உட்பட 3772 ரன்களை விளாசி இருக்கிறார்.
இதனால் உலகக்கோப்பை தொடருக்கான ப்ரோமோவிலும் கூட விராட் கோலிக்கு நிகராக பாபர் அசாமிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஃபேப் 4 என்ற சொல்லை மாற்றி ஃபேப் 5 என்று விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய ஜாம்பவான் வீரர்களுடன் பாபர் அசாமும் இணைக்கபட்டார். அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணில் முதல்முறையாக பாபர் அசாம் பேட்டிங் செய்யவுள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்தது.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஏமாற்றியுள்ளார். கத்துக்குட்டி அணியான நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்த பாபர் அசாம், நேற்று இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இரு போட்டிகளிலும் சேர்த்து 15 ரன்களே சேர்த்திருப்பதால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
புதிய மைதானம், புதிய சூழல் என்று காரணங்கள் கூறினாலும் பாகிஸ்தான் அணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஐதராபாத்திலேயே முகாமிட்டுள்ளது. 2 பயிற்சி ஆட்டங்கள் மற்றும் 2 உலகக்கோப்பை ஆட்டங்களை அதே மைதானத்தில் தான் விளையாடி இருக்கிறது. பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய பாபர் அசாமால், முக்கியமான போட்டிகளில் வழக்கம் போல் சொதப்புவது தொடர்கதையாக வருகிறது. இதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியிலாவது பாபர் அசாம் ஃபார்முக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.