அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் வீரர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி சென்ற போது அங்கிருந்த ரசிகர்கள் சிலர் ரிஸ்வானை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் பாகிஸ்தான் வீரர்கள் பில்டிங் செய்து கொண்டிருந்தபோது ரசிகர்கள் பேப்பர் ராக்கெட் விட்டது போன்ற பல சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது .ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் பி சி சி ஐ தரப்பில் இருந்து எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அகமதாபாத்தில் தங்களுடைய வீரர்களிடம் ரசிகர்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஐசிசியிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வீரர்களிடம் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலை அகமதாபாத் கிரிக்கெட் நிர்வாகிகள் மேற்கொள்ளவில்லை என்றும் இது தொடர்பாக பிசிசிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த புகாரை ஏற்றுக் கொண்டுள்ள ஐசிசி இது குறித்து விசாரணை நடத்தும் என தெரிகிறது.
அதன்படி எதிரணி வீரர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டால் இனி அந்த மைதானத்தில் சில காலத்துக்கு போட்டியை நடத்த முடியாத படி தடை விதிக்க ஐசிசியால் முடியும்.
மேலும் வீரர்களுக்கு பாதுகாப்பற்ற மைதானம் என பட்டியலிட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை அங்கு நடத்தாமல் ஐசிசி புறக்கணிக்க முடியும்.மேலும் பாகிஸ்தான் வீரர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட ரசிகர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஐசிசி பிசிசிஐ இடம் அறிக்கை கேட்கும்.
இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று விசாரணை பிறகு நடக்க வாய்ப்பு உள்ளது.இந்த நிலையில் அகமதாபாத்தில் தான் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற உள்ளதால் பாகிஸ்தான் தற்போது அளித்துள்ள புகார் பெரிய தர்ம சங்கடத்தை பிசிசிஐக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு வந்து தாங்கள் அகமதாபாத்தில் விளையாட மாட்டோம் என போர்க்கொடி தூக்கினால் அது நிச்சயம் பிசிசிஐக்கு பெரிய தலைவலியை கொடுக்கும்.