கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது ரிசர்வ் டேவில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் 50 ஓவர் போட்டியாக இது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு தற்போது மிகப்பெரிய பின்னடைவு ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய வேகப்பந்துவீச்சு தான், அதிலும் ஷாகின் ஷா அப்ரிடி, நசீம்சா, ஹரிஷ் ரவுப் ஆகிய மூவர்களும் இணைந்தால் எதிரணி பேட்ஸ்மன்களுக்கு நிச்சயம் கஷ்ட காலம் தான்.

அந்த அளவிற்கு மூவரும் கடினமான லென்த் மற்றும் லைனில் பந்து வீசுவார்கள். இந்த மூன்று பேரில் ஒருவர் இல்லை என்றால் கூட அது மிகப்பெரிய பாதிப்பை பாகிஸ்தான் அணியில் ஏற்படுத்தும். இந்த நிலையில் ஹாரிஸ் ரவுப் தன்னுடைய வேகப்பந்து வீச்சால் இந்திய அணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்திருக்கிறார்.இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது அவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் நேற்று அவர் வலியால் அவதிப்பட்ட நிலையில் தான் தொடர்ந்து பந்து வீசி இருக்கிறாராம் 5 ஓவரில் 27 ரன்களை அவர் விட்டுக் கொடுத்தார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. நேற்றைய ஆட்டத்தில் ஹரிஷ் ரவுப் எப்போதும் போல் பந்து வீசக்கூடிய அளவுக்கு நன்றாக செயல்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அவருடைய காயம் அதிகமாக இருப்பதால் இன்றைய நாள் ஆட்டத்தில் அவர் பந்து வீச மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பில்டிங்கிலும் அவர் நிற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டிக்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியில் இருந்து தற்போது அவர் விலகி இருக்கிறார்.
10 நாட்கள் ஓய்வில் ஹரிஷ் ரவுப் இருக்க வேண்டும் என அந்த அணியின் மருத்துவ குழு குறிப்பிட்டுள்ளது. இதேபோன்று ஷாகின் அப்ரீடிக்கும் நேற்று பில்டிங் செய்யும் போது கைவிரலில் காயம் ஏற்பட்டது. எனினும் அது அச்சப்படும் அளவிற்கான பெரிய காயம் இல்லை என்பதால் அவர் இன்றைய ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடுகிறார். ஹரிஷ் ரவுப் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக மாறியுள்ளது.