காதல் மன்னன்
இம்ரான் கான் ஒரு போட்டியில் விளையாடுகிறார் என்று தெரிந்தால் அவருக்காக ரோஜா பூக்களை வைத்து பெண்கள் காத்திருந்த காலம் இருந்தது. அந்த அளவுக்கு இம்ரான் கான் பெண்களிடையே கனவு கண்ணனாக வலம் வந்தார். அன்றைய காலத்தில் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்த இம்ரான் கான் 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தார்.
பிரதமர் பதவி
அதன் பிறகு கிரிக்கெட்டில் இருந்து விலகி இம்ரான் கான் தீவிர அரசியலில் குதித்து, 2018 ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் அமர்ந்தார். எனினும் இம்ரான் கானால் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய முடியாமல் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இம்ரான் கான் குறித்து வசிம் அக்ரம் பேசிய வீடியோ காட்சி ரசிகர்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
இரவு விடுதிக்கு சென்றோம்
இந்த வீடியோவில் வசிம் அக்ரம் கூறியதாவது, நாங்கள் இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மிகவும் இளம் வீரராக இருந்தேன்.ஒரு நாள் இம்ரான் கான் என் அறைக்கு வந்து இரவு விடுதிக்கு செல்லலாம் வா என்று அழைத்தார். எனக்கு அப்போது பார்ட்டி என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் உடனே சரி கேப்டன் என்று நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன்.
பால் குடித்தார்
இருவரும் லண்டனில் உள்ள பிரபல இரவு விடுதிக்குச் சென்றோம். நாங்கள் இருவரும் அந்த விடுதிக்குள் நுழைந்த போது என்னை யாரும் கண்டு கொள்ளவே இல்லை.ஆனால் இம்ரான் கானை அங்கிருந்த மக்கள் அடையாளம் கண்டு கொண்டு சுற்றிக்கொண்டனர். இம்ரான் கானுக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது.எனவே இரவு விடுதியில் சென்று அவர் குடிக்க பால் கேட்டார்.
காத்திருந்த பெண்கள்
அப்போது இம்ரான் கானுக்காக இரவு விடுதியில் பல பெண்கள் காத்திருந்தனர். அவரிடம் கைகுலுக்க ஒரு நீண்ட வரிசையே இருந்தது. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் , அந்த வரிசையில் இருந்த அனைவரும் பெண்கள். இதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அந்த அளவுக்கு இம்ரான் கான் ஒரு மாயாஜால கவர்ச்சியை கொண்டு இருந்தார் என்று வசிக்கரம் கூறியிருக்கிறார்.