2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் சுமார் பத்து அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை முன்பே வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இதுவரை குழப்பங்கள் நீடித்து வருகிறது. பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் தாங்கள் பங்கேற்க மாட்டோம் என இந்தியா அறிவித்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.

இதனை தீர்க்க பாகிஸ்தான் கொடுத்த ஐடியாவையும் இந்தியா நிராகரித்துள்ளது. இதனால் ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் நாங்கள் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்தது. இதனை அடுத்து ஐசிசி நடத்திய ஆலோசனையில் இந்தியாவுக்கு வர ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான் தாங்கள் விளையாடும் போட்டியை தென்னிந்தியாவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பெங்களூர் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்த வேண்டும் என்றும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தங்களது அணி விளையாடப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அகமதாபாத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் இதனால் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு இந்தியா ஒப்புதல் தெரிவித்த நிலையில் அரையிறுதிப்போட்டி மற்றும் இறுதிப் போட்டிகள் எல்லாம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வேண்டும் என ஜெய்ஷா கனவு கண்டு இருந்தார்.
பாரம்பரியமிக்க பல மைதானங்களில் இருந்தும் அகமதாபாத்தில் இறுதிப்போட்டி நடத்துவதற்கு ஏற்கனவே பல கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் டிவிஸ்ட் ஒன்றை வைத்துள்ளது. அதன்படி தங்களது அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்றும் அப்படி நடந்தால் தாங்கள் அகமதாபாத்தில் எந்த போட்டியையும் விளையாட மாட்டோம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதனால் அட்டவணையை அறிவிக்கும் போது நாக் அவுட் சுற்றுகளை இந்தியாவில் வேறு மைதானங்களில் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. பல கோடி ரூபாய் செலவில் கட்டி உலகக்கோப்பை பைனலை நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தி விடலாம் என்று நினைத்த ஜெய்ஷாவின் முடிவுக்கு தற்போது பேரிடியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.