லாகூர்: இந்திய ஒரு நாள் அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை ஓரங்கட்ட பயிற்சியாளர் கம்பீர் முயற்சி செய்வதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டு செய்தித்தாளுக்கு பேட்டி அளித்துள்ள அவர், விராட் கோலியும் ரோகித் சர்மாவும் இந்திய பேட்டிங் வரிசையில் முதுகெலும்பாக விளங்குகிறார்கள்.
தற்போது நடந்து முடிந்த ஒரு நாள் தொடர்களில் அவர்கள் விளையாடிய விதத்தை பார்த்தால், நான் உறுதியாக சொல்வேன். இருவரும் 2027 உலக கோப்பை போட்டிகள் விளையாட முடியும். இது போன்ற நட்சத்திர வீரர்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும் வேண்டுமென்றால், இந்தியா பலம் குன்றிய அணிகளுடன் விளையாடும்போது ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு நீங்கள் ஓய்வு அளித்துவிட்டு மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி பார்க்கலாம் என்று ஷாகித் அப்ரிடி கூறினார்.

அப்ரிடி விளையாடிய காலத்திலிருந்து அவருக்கும் கம்பிருக்கும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கும். இருவரும் களத்தில் அவ்வப்போது மோதிக் கொள்வார்கள். இந்த நிலையில் கம்பீர் குறித்து பேசிய அப்ரிடி, இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் தனது பணியை தொடங்கிய போது நான் செய்வது சொல்வது எல்லாம் சரி என்று அவர் நினைத்துக் கொண்டார்.
ஆனால் போகப் போக அவர் செய்தது எல்லாமே எப்போதும் சரியாக இருந்தது கிடையாது என்பது நிரூபனமாகிவிட்டது என்று சாடியுள்ளார். அதேபோன்று ரோகித் சர்மா அண்மையில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த அப்ரிடியின் சாதனையை முறியடித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் சாதனைகள் என்பது உடைப்பதற்காக தான் படைக்கப்படுகிறது.
தற்போது என்னுடைய சாதனையையும் முறியடிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் எனக்கு பிடித்த வீரர் ஒருவர் என்னுடைய ரெகார்டை முறியடித்து இருக்கிறார் என்று நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கின்றது. நான் அதிவேகமாக சதம் அடித்து, 18 ஆண்டுகள் வரை அந்த ரெக்கார்ட் நீடித்தது. தற்போது தான் அது முறியடிக்கப்பட்டது. எனவே ஒரு வீரர் ஒரு சாதனையை படைக்கிறார் என்றால் இன்னொரு வீரர் நிச்சயமாக வந்து அதனை முறியடிப்பார்.
அதுதான் கிரிக்கெட்! நான் ரோகித் சர்மாவுடன் ஐபிஎல் 2008 ஆம் ஆண்டு சீசனில் டெக்கான் சார்ஜஸ்காக விளையாடினேன். அப்போதே எனக்கு ரோகித் சர்மாவை மிகவும் பிடிக்கும். அவர் பயிற்சியின்போது பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்த்து இந்தப் பையன் நிச்சயமாக இந்திய அணிக்கு விளையாடுவார் என்று நான் நினைத்தேன் என அப்ரிடி பாராட்டியுள்ளார்.