கராச்சி : பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் ஷஹீன் ஷா அப்ரிடி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் கலந்தர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு அந்த அணியே சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில் 2024 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் அணி படுமோசமாக ஆடி 10 போட்டிகளில் எட்டு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பையும் இழந்தது அந்த அணி. தனது கடைசி லீக் போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஷஹீன் ஷா அப்ரிடி கடைசி ஓவரை வீசினார்.

அப்போது அவர் சரியாக பந்து வீசாததால் எதிரணியான குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் முகமது வாசிம் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து தனது அணியின் பிளே - ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் அணி 166 ரன்கள் குவித்தது. ஷஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சாளர் என்ற போதும் ஐந்தாம் வரிசையில் களமிறங்கி 34 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார்.
அதன் பின் ஆடிய குவெட்டா அணி கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது கடைசி ஓவரை வீசிய ஷஹீன் ஷா, முதல் பந்தில் விக்கெட் எடுத்த போதும் அடுத்த நான்கு பந்துகளில் இரண்டு ஃபோர் உட்பட 10 ரன்களை விட்டுக் கொடுத்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முகமது வாசிம் சிக்ஸ் அடித்தார். இதை அடுத்து குவெட்டா அணி தோல்வி அடைந்தது.
முக்கிய நேரங்களில் ஷஹீன் ஷா அப்ரிடி தானே பேட்டிங் செய்ய வேண்டும், தானே பவுலிங் செய்ய வேண்டும் என நினைத்ததும், பந்துவீச்சில் அவர் சரியாக செயல்படாததும் தான் தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர்கள் அவரை விமர்சனம் செய்தனர்.
முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறுகையில், எப்போதும் யார்க்கர் வீசும் ஷஹீன் ஷா அப்ரிடி, இந்த கடைசி ஓவரில் ஸ்லோ பால், கட்டர் போன்ற பந்துகளை வீசினார். இதன் மூலம் இனி ஷஹீன் ஷா பந்துகளை எப்படி அடித்து ஆட வேண்டும் என பேட்ஸ்மேன்களுக்கு தெரிந்து விட்டது எனக் கூறி இருக்கிறார். இனி பாகிஸ்தான் அணிக்காக அவர் பந்து வீசும் போது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு ஷஹீன் ஷா அப்ரிடியின் பலவீனம் என்ன என்பது தெரிந்து விட்டது எனக் கூறி இருக்கிறார் வாசிம் அக்ரம்.