
சிறப்பான இந்திய வீரர்கள்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது இந்திய அணி. அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா முதல் நடுநிலை மற்றும் இறுதி ஆட்டக்காரர்கள் வரை அனைவரும் இந்த போட்டியில் தங்களது சிறப்பை வெளிப்படுத்தி ஆடினர்.

சர்வதேச பாராட்டு
பௌலர்களும் மிகவும் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தினர். இந்த தொடரில் ஸ்பின்னர்கள் ஆர் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரின் ஆட்டம் சர்வதேச அளவில் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து இந்த தொடரில் 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

வெற்றிக்கு கைகொடுத்த ரிஷப்
இந்த தொடரில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தன்னுடைய ஆட்டத்தின்மூலம் அனைவரையும் ஆச்சர்யப் படுத்தினார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களிலும் இவரது பங்கு சிறப்பாக இருந்தது. ஆட்டம் தொய்வடையும் நேரத்தில் எல்லாம் இந்தியாவின் வெற்றிக்கு சிறப்பாக கைகொடுத்தார் ரிஷப்.

ரோகித் சர்மா பாராட்டு
இந்நிலையில் ரிஷப் பந்த் தன்னுடைய ஆட்டத்தை போட்டிக்கு போட்டி வலிமையாக்கி வருவதாக துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் சிறப்பான ஆட்டங்களை அளித்து வருவதாகவும் அவரை எதை கொண்டும் தடுக்க முடியாது என்றும் ரோகித் சர்மா மேலும் கூறியுள்ளார்.

உணர்ந்து செயல்படும் ரிஷப்
அவர் மீது எந்த நெருக்கடியையும் அளிக்காமல் இருந்தாலே அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார் என்றும் அறிவுறுத்தியுள்ளார். போட்டிகளை உற்சாகத்துடன் ரிஷப் எதிர்கொள்வதாகவும் ஆட்டத்தின் போக்கை உணர்ந்து செயல்படுவதாகவும் ரோகித் சர்மா மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











