கவுகாத்தி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் 36 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலிக்கு பின் 50 அரைசதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ஷிகர் தவான் படைத்துள்ளார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடைபெற்று வரும் 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங் - கேப்டன் ஷிகர் தவான் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த கூட்டணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 64 ரன்கள் குவித்து அசத்தியது. தொடர்ந்து இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங் 28 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். பின்னர் ஹோல்டர் பந்தில் 60 ரன்கள் எடுத்திருந்த போது பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ராஜபக்சே 1 ரன் எடுத்திருந்த போது காயம் காரணமாக ரிடையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.
பின்னர் ஜித்தேஷ் சர்மா - ஷிகர் தவான் கூட்டணி இணைந்து பஞ்சாப் அணியின் ரன் குவிப்பை வேகமாக உயர்த்தியது. ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான், அடுத்த ஓவரிலேயே கியரை அதிரடிக்கு மாற்றினார். இதன் காரணமாக 36 பந்துகளில் ஷிகர் தவான் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த அரைசதத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் 50 அரைசதங்கள் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். முதலிடத்தில் 60 அரைசதங்களுடன் டேவிட் வார்னரும், 2ஆம் இடத்தில் 50 அரைசதங்களுடன் விராட் கோலியுடன் ஷிகர் தவானும் இணைந்துள்ளார்.