
படிக்கல் வாவ்
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். வழக்கம் போல் ஆரம்பம் முதலே இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அந்த அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது. குறிப்பாக, படிக்கல் தொடக்கம் முதலே பஞ்சாப் பவுலர்களை விளாச ஆரம்பித்துவிட்டார். கோலி அடக்கி வாசிக்க, நல்ல ரிதம் கண்ட படிக்கல், மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விளாசினார். எனினும், 40 ரன்களில் வெளியேறினார் தேவ்தத் படிக்கல்.

அதிரடி இன்னிங்ஸ்
அடுத்து களமிறங்கிய டேனியல்ஸ் கிறிஸ்டியன் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு கேப்டன் விராட் கோலியும் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஹென்றிக்ஸ் ஓவரில் கேட்ச்சானார். முதன் முதலாக இன்று பஞ்சாப் அணியில் களமிறங்கிய ஹென்ரிக்ஸ் இன்று 4 ஓவர்கள் வீசி, வெறும் 12 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் பிறகு டி வில்லியர்ஸ் - மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில், மேக்ஸ்வெல் பஞ்சாப் பவுலர்களை விட்டு விளாசினார். 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால், அப்படியே குறைந்த ரன் ரேட்டை மேக்ஸ்வெல் உயிர்த்தெழ வைத்தார். டி வில்லியர்ஸ் உட்பட ஆர்சிபி அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், மேக்ஸ்வெல் இறுதிக் கட்டத்தில் அணியை மீட்டெடுத்தார். ஒருக்கட்டத்தில், 150 வருவதே சிரமம் என்றிருந்த நிலையில், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக இருந்தார். 33 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் விளாசினார். இதில், 3 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடக்கம்.

அபார தொடக்கம்
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல் - மாயங்க் அகர்வால் ஜோடி மிக அபாரமான பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தியுள்ளது. பெங்களூரு அணியின் அனைத்து பவுலர்களையும் இவர்கள் ஒரு கை பார்த்தனர். குறிப்பாக, ஷாபாஸ் ஓவரை சற்று அதிகமாகவே விளாசினார்கள். எனினும், அவர் ஓவரிலயே 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த லோகேஷ் ராகுல் கேட்ச்சானர். ஆனால், மறுபக்கம் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் மாயங் அகர்வால், அரைசதம் கடந்து ஆடி வருகிறார்.

மாயங்க் மீது சுமை
பஞ்சாப் அணி, 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு அந்த அணிக்கு 42 பந்துகளில் 65 ரன்களே தேவை. இந்த முக்கியமான சூழலில் தான் நிகோலஸ் பூரன் வெறும் 3 ரன்களில் தூக்கி கேட்ச் கொடுத்து வெளியேறினார். எல்லா மேட்சிலும் 3 ரன்களில் அவுட்டாவதாக குலதெய்வத்துக்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பார் போல. 3-ஐ தாண்ட மாட்டேங்குறார். இப்போது ஒட்டுமொத்த சுமையும் மாயங்க் அகர்வால் தலையில் விழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











