சென்னை: பஞ்சாப் அணியின் அதர்வா தய்டே ரிட்டயர்ட் அவுட் முறையில் ஆட்டமிழந்ததன் மூலம், கிரிக்கெட் வீரர்களுக்கு ரிட்டயர்ட் முறை சரியா அல்லது தவறா என்ற கேள்வி ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்தப் போட்டியின் போது ராஜஸ்தான் விக்கெட்டுகள் வேகமாக சரிந்ததால், 4வது வீரராக அஸ்வின் களமிறக்கப்பட்டார். அவர் 23 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், திடீரென ரிட்டயர்ட் அவுட் முறையில் களத்தில் இருந்து வெளியேறினார்.

ஸ்ட்ரீட் கிரிக்கெட் போல் அதிமுக்கிய ஐபிஎல் தொடரில் கூட ரிட்டயர்ட் அவுட் முறை வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் அதர்வா தய்டே அரைசதம் விளாசி இருந்த சூழலில், திடீரென ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார்.
அரைசதம் விளாசிய ஒரு வீரர், திடீரென ரிட்டயர்ட் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியது பஞ்சாப் அணியின் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இதன் மூலம் ரிட்டயர்ட் அவுட் முறையில் ஒரு வீரரை வெளியேற்ற அணி நிர்வாகங்கள் எதன் அடிப்படையில் முடிவு எடுக்கிறது என்பது ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது. ஏனென்றால் இந்த ஆட்டத்திற்கு இவர் சரிபட்டு வரமாட்டார் என்று அணி நிர்வாகம் ஒரு வீரரை களத்தில் பேட்டிங் செய்யும் போது வெளியேற்றுவது, அந்த வீரரின் மனநிலையை அதிகளவில் பாதிக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு போட்டியில் சுமார் 40 பந்துகள் ஆடிய ஒரு வீரர், அடுத்தடுத்து விரைந்து அதிரடிக்கு திரும்புவது மிகவும் எளிதானது. அதர்வா தய்டே ஏற்கனவே இதனை செய்திருக்கிறார். இருப்பினும் அதர்வா தய்டே மீது நம்பிக்கை வைக்காமல் பஞ்சாப் அணி நிர்வாகம் செயல்பட்டுள்ளது. இதிலிருந்து அதர்வா தய்டே எப்படி மீண்டு வருவார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.