இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடர்
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரில் ஆட உள்ளது பாகிஸ்தான் அணி. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூன்று மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் ஆடாத நிலையில் பாகிஸ்தான் அணி இந்த தொடருக்கு ஒப்புக் கொண்டு இருந்தது.
பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி
இங்கிலாந்து தொடருக்காக கடந்த சில வாரங்களாக பயிற்சி செய்து வந்தது பாகிஸ்தான் அணி. 29 வீரர்கள் ஒன்றாக பயிற்சி செய்து வந்தனர். அவர்களுக்கு பயிற்சிக்கு முன்பே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யவில்லை. இந்த நிலையில், ஜூன் 28 இங்கிலாந்து கிளம்ப இருந்தது பாகிஸ்தான் அணி.
10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ்
இங்கிலாந்து கிளம்பும் முன் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. அதனால், இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடர் நடக்குமா? என்ற சந்தேகமும் எழுந்தது.
முகமது ஹபீஸ் மறு பரிசோதனை
அந்த 10 வீரர்களில் முகமது ஹபீஸ்-உம் ஒருவர். அவர் தனக்கு கொரோனா வைரஸ் உள்ளதா? என்ற சந்தேகத்தில் தனிப்பட்ட முறையில் மீண்டும் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முடிவு கிடைத்துள்ளது.
ட்விட்டரில் பகிர்ந்தார்
தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை ட்விட்டரில் அறிவித்த அவர், ஆதாரமாக தான் மறு பரிசோதனை செய்த மருத்துவ அறிக்கையை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார். அதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது விமர்சனம் எழுந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கோபம்
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முகமது ஹபீஸ் மீது கோபம் அடைந்துள்ளது. அவர் தனிப்பட்ட முறையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டாலும் அதை தங்களிடம் மட்டும் தெரிவிக்காமல், பொது வெளியில் கூறியது தவறு என கூறி உள்ளது.
நிறைய பிரச்சனை
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நடத்திய பரிசோதனை குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தங்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். இது பற்றி ஹபீஸிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.
இங்கிலாந்து தொடர் நடக்குமா?
தற்போது ஹபீஸ் தவிர 9 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கும் நிலையில், இங்கிலாந்து நாட்டுக்கு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியும் இங்கிலாந்து தொடரில் ஆடுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.