டி20 தொடர்
பாகிஸ்தான் ப்ரீமியர் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரில் திடீரென வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 20 போட்டிகள் உள்ளன.
மீண்டும் பி.எஸ்.எல்
இதனையடுத்து ஐபிஎல்-ஐ போன்று பிஎஸ்எல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 5ம் தேதி முதல் பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் நடைபெறவுள்ளது. அனைத்து அணி வீரர்களும் மே 26ம் தேதி அபுதாபி புறப்படுகின்றனர். இதற்காக அனைத்து வீரர்களும், அதிகாரிகளும் லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள ஹோட்டல்களுக்கு வரவழைக்கப்பட்டனர்.
233 பேர்
வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 233 பேர் பிஎஸ்எல் தொடருக்காக பபுளுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 25ம் தேதியே அபுதாபிக்கு புறப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் 3 முறை புறப்பாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அவர்கள் அனைவரும் ஹோட்டல் அறையிலே தான் உள்ளனர். அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அவசர அவசரமாக அணி நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
என்ன காரணம்
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், அபுதாபியில் தரையிறங்குவதற்கு அந்நாட்டு அரசிடம் இருந்து இன்னும் அனுமதி வாங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அரசின் அனுமதிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தள்ளிப்போகிறதா பிஎஸ்எல்
அபுதாபியில் தொடரை நடத்திக்கொள்வதற்கு அனுமதி வாங்கிய பாகிஸ்தான், அங்கு தரையிறங்குவதற்கும் முன்கூட்டியே அனுமதி வாங்கியிருக்கலாம் என ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அபுதாபியில் வீரர்கள் கட்டாயமாக ஒரு வாரம் குவாரண்டைனில் இருக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது நாட்கள் தள்ளிப்போவதால் திட்டமிட்ட தேதியில் போட்டிகள் தொடங்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.