வலுக்கும் எதிர்ப்பு.. சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா? நடக்காதா?
Recommended Video

சென்னை: தொடர் காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்று கேள்வி எழுந்து இருக்கிறது. போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்பட வேண்டும் போராடும் மக்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
தற்போது தமிழகம் முழுக்க காவிரி போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் நிலை தற்போது உச்ச கட்டத்தை அடைந்து இருக்கிறது.
வேல்முருகன், சினிமா நட்சத்திரங்கள், போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், நெட்டிசன்கள் என பலர் ஐபிஎல் போட்டிக்கு தடை கேட்டு போராடி வருகிறார்கள். ஐபிஎல் போட்டிக்கு தடை இல்லையென்றாலும், சென்னையில் எந்த போட்டியும் நடக்க கூடாது என்று கூறியுள்ளார்கள்.

எதிர்ப்பு
மக்களின் போரட்டத்தை திசை திருப்பும் வகையில் ஐபிஎல் போட்டிகள் நடக்க இருப்பதாக போராட்டகாரர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். எதிர்ப்பை மீறி ஐபிஎல் போட்டி நடந்ததால், போட்டிக்கு வரும் வீரர் சிறைபிடிக்கப்படுவார்கள் என்று கூட சிலர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் ஐபிஎல் மைதானத்திலேயே போராட்டம் செய்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இரண்டு வருடம்
இரண்டு வருடங்களுக்கு பின் சென்னை அணி இப்போதுதான் ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். அதேபோல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியை காணவும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் இந்த போட்டிகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எத்தனை போட்டி
சென்னை அணி மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடும். இதில் 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும். மீதமுள்ள போட்டிகள் மற்ற மைதானங்களில் நடக்கும். இதில் சென்னை மைதானத்தில் முதல் போட்டி வரும் ஏப்ரல் 10 செவ்வாய் கிழமை, கொல்கத்தாவிற்கு எதிராக நடக்க உள்ளது.

விற்பனை
இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது. மும்பையில் நடக்கும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுக்கும், சென்னை மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டும் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டது. டிக்கெட் விலை அதிகமாக்கப்பட்ட பின்பும் கூட பலர் போட்டியை காண ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பாக நடக்கும்
இந்த நிலையில் சென்னையில் நடக்க உள்ள 7 போட்டிகளும் கண்டிப்பாக நடக்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. போட்டியை நடத்துவதில் எந்த விதமான மாற்றமும் கிடையாது என்று கூறியுள்ளனர். கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த நிலையில் தொடர் எதிர்ப்பு காரணமாக சென்னையில் வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. போட்டி அன்று அதிக போலீஸ்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் போட்டி இந்த முறை அதிக வைரல் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications