விராட் கோலி -ரஹானேவை கம்பேர் செய்யாதீங்க பிளீஸ்... சச்சின் டெண்டுல்கர் ஆதங்கம்
மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ரஹானே சிறப்பான கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து கேப்டன் விராட் கோலியின் கேப்டன்ஷிப்புடன் அஜிங்க்யா ரஹானேவின் கேப்டன்ஷிப்பை பல தரப்பினரும் ஒப்பிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் தற்காலிக கேப்டன் அஜிங்க்யா ரஹானேவை ஒப்பிட வேண்டாம் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை அடைந்த நிலையில், அடுத்ததாக அஜிங்க்யா ரஹானேவின் தலைமையில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ரஹானே கேப்டன்
கேப்டன் விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பிய நிலையில், இந்திய அணியை 3 போட்டிகளில் ரஹானே வழிநடத்தவுள்ளார். இதில் 2வது போட்டியில் சிறப்பான வெற்றியை அவர் இந்திய அணிக்காக பெற்று தந்துள்ளார். அவரது பொறுமையான அணுகுமுறை குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆஸி. வீரர்கள் பாராட்டு
அவரது கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பாண்டிங் உள்ளிட்டவர்கள் பாராட்டு தெரிவித்தது குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அடுத்த கேப்டனாவதற்கான வாய்ப்பு ரஹானேவிற்கு உள்ளது குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்தும் சூசகமாக தெரிவித்திருந்தார்.

கம்பேர் செய்ய வேண்டாம்
இந்நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் ரஹானே இருவரையும் கம்பேர் செய்ய வேண்டாம் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இருவரும் இந்தியர்கள் என்றும் இந்தியாவிற்காக விளையாடுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தனிநபர்களை காட்டிலும் நாடு தான் முக்கியம் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications