மும்பை: 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் கேப்டன் தோனி திடீரென ஓய்வை அறிவித்தார். அதன்பின் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்று கொண்டார். விராட் கோலி கேப்டன்சியை ஏற்ற பின் தான் இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற தீவிரம் ஏற்பட்டது.
அதேபோல் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்று விதிமுறை கொண்டு வரப்பட்டது. இதற்காக புதிதாக என்சிஏ தரப்பில் யோ-யோ டெஸ்ட் கொண்டு வரப்பட்டது. அதேபோல் வீரர்களின் மனநிலையிலும் கடைசி வரை வெற்றிக்காக போராட வேண்டும் என்ற மாற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக விராட் கோலி தலைமை தாங்கிய 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 40 போட்டிகளில் அபார வெற்றியை பெற்றது. வெற்றி, தோல்வி என்பதை கடந்து டிரா என்ற பேச்சிற்கே விராட் கோலி இடம் கொடுக்கவில்லை. ஆனால் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது திடீரென கேப்டன்சியை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடுவேன் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகியிருக்க கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். அதில், எனக்கு விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஏனென்றால் 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துள்ளார்.
விராட் கோலி எப்போதும் வெளிநாடுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டார். ஏனென்றால் இந்திய மண்ணில் எதிரணிகளால் வெற்றி பெறுவது சாதாரண விஷயமல்ல. 75 சதவிகிதம் இந்திய அணியின் வெற்றி உறுதியான ஒன்றாகும். இந்திய மிகவும் மோசமாக விளையாடினால் மட்டுமே தோல்வியை சந்திக்கும். அதன் காரணமாகவே வெளிநாட்டில் வெல்ல வேண்டும் என்று தீவிரம் காட்டினார்.
அதேபோல் விராட் கோலி கேப்டனாக இருந்த போது அவர் அடித்த ரன்கள் எப்போதும் உச்சத்தில் தான் இருக்கும். வெற்றிபெற வேண்டும் என்பதில் முன்னிலையில் இருந்து விராட் கோலி போராடுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி கேப்டன்சியில் இருந்து விலகியதில் இருந்து அவரின் பேட்டிங் சராசரி குறைந்தது குறிப்பிடத்தக்கது.