ஆர்சிபி வெற்றி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், பரபரப்பான ஆட்டம் ஆர்சிபி வசம் சென்றது. 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய ஆர்சிபி அணி 149 ரன்களை மட்டுமே அடித்தது.
6 விக்கெட்டுகள்
இதையடுத்து எஸ்ஆர்எச் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்தார். ஆயினும் இறுதி 4 ஓவர்களில் அந்த அணியின் 6 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் போட்டி ஆர்சிபிக்கு சாதகமானது.
சாஹாவை வீழ்த்திய சிராஜ்
ஆர்சிபியின் முகமது சிராஜ் தனது முதல் ஓவரில் மெய்டன் ஓவரை போட்டார். மேலும் அடுத்த ஓவரில் எஸ்ஆர்எச்சின் முக்கியமான விக்கெட்டான விரித்திமான் சாஹாவை அவுட் செய்து அவரை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். இந்த முக்கிய விக்கெட் எதிரணியை மனதளவில் தளர்வடைய செய்தது.
10 டாட் பந்துகள்
அவர் முதல் 2 ஓவர்களில் 10 டாட் பந்துகளை போட்டது அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் உள்ளிட்டவற்றில் தனது சிறப்பான திறமையை காட்டி பாராட்டுக்களை பெற்றுள்ள அவர் தற்போது ஐபிஎல்லிலும் அதை தொடர்ந்து வருகிறார்.
ஸ்பின்னர்களுக்கு சாதகம்
இந்நிலையில் நேற்றைய போட்டியில் பிட்ச் மெதுவாகவும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவும் இருந்ததால், இடது கை ஸ்பின்னர் ஷாபாசை பௌலிங் செய்ய விராட் பணித்ததாகவும் அது போட்டியையே சிறப்பாக மாற்றியதாகவும் சிராஜ் தெரிவித்துள்ளார். அவர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.