டெல்லி: 2025 புரோ கபடி லீக் (PKL) தொடரின் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில், பாட்னா பைரேட்ஸ் அணி 46-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது பாட்னா அணி. மேலும், பாட்னா பைரேட்ஸ் அணி மூன்றாவது எலிமினேட்டர் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த வாழ்வா-சாவா ஆட்டத்தில், பாட்னா அணியின் நட்சத்திர ரைடர் அயன், 19 புள்ளிகளை வாரிக்குவித்து அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தார். அவரது அதிரடி ரைடுகளும், அணியின் சிறப்பான தடுப்பாட்டமும் பெங்களூரு அணிக்கு ஆரம்பம் முதலே பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

ஆட்டம் தொடங்கியதும், பெங்களூரு புல்ஸ் வீரர் அலி மிர்சாயன் முதல் புள்ளியைப் பெற்றுக்கொடுத்தார். ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே பாட்னா பைரேட்ஸ் வீரர் அயன் தனது முதல் ரைடிலேயே புள்ளியைப் பெற்று பதிலடி கொடுத்தார். இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால், ஆரம்ப நிமிடங்கள் விறுவிறுப்பாகச் சென்றன.
போட்டியின் முக்கியத் திருப்புமுனையாக, அயனின் சிறப்பான ரைடிங் மூலம் பாட்னா அணி முதல் 'ஆல் அவுட்டை' நிகழ்த்தி 9-3 என முன்னிலை பெற்றது. இந்த உத்வேகத்துடன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பாட்னா, முதல் பாதி ஆட்டத்தின் 'ஸ்ட்ராடஜிக் டைம் அவுட்'-க்கு முன்பாகவே 10 புள்ளிகள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியது.
பெங்களூரு அணி ஒரு 'சூப்பர் டேக்கிள்' மூலம் மீண்டு வர முயன்றாலும், பாட்னாவின் தடுப்பாட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மீண்டும் ஒரு 'ஆல் அவுட்டை' நிகழ்த்திய பாட்னா, முதல் பாதியின் முடிவில் 27-13 என்ற வலுவான முன்னிலையுடன் ஆட்டத்தைத் தன்வசப்படுத்தியது. அதற்குள், அயன் தனது 'சூப்பர் 10'-ஐ நிறைவு செய்து அசத்தினார்.
இரண்டாம் பாதியிலும் பாட்னா அணியின் கையே ஓங்கியிருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத தருணத்தில், பெங்களூரு புல்ஸ் வீரர் சுபம் பிடக் ஒரு மாபெரும் 'சூப்பர் ரைடு' மூலம் வரலாற்றுச் சாதனை படைத்தார். ஒரே ரைடில் 6 டச் புள்ளிகள் மற்றும் 1 போனஸ் புள்ளி என மொத்தம் 7 புள்ளிகளை அள்ளி, போட்டியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார். புரோ கபடி வரலாற்றில் ஒரு வீரர் ஒரே ரைடில் 7 புள்ளிகள் பெறுவது இதுவே முதல் முறையாகும். இதன்மூலம், பிரதீப் நர்வாலின் சாதனையை அவர் முறியடித்தார்.
இந்த மெகா ரைடைத் தொடர்ந்து, பெங்களூரு புல்ஸ் அணி பாட்னாவை 'ஆல் அவுட்' செய்து, புள்ளி வித்தியாசத்தை வெகுவாகக் குறைத்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 'ஸ்ட்ராடஜிக் டைம் அவுட்' சமயத்தில், பாட்னா அணி 36-29 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும், பெங்களூரு அணியின் ஆக்ரோஷம் போட்டியை விறுவிறுப்பாக்கியது.
இருப்பினும், கடைசி நிமிடங்களில் மீண்டும் நிதானத்தைக் கடைப்பிடித்த பாட்னா பைரேட்ஸ், பெங்களூரு அணிக்கு மேலும் வாய்ப்பளிக்காமல் புள்ளிகளைச் சேர்த்து, இறுதியில் 46-37 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது. பெங்களூரு அணியின் சுபம் பிடக்கின் வரலாற்றுச் சாதனை வீணானது.
இந்த வெற்றியின் மூலம், புதன்கிழமை நடைபெறும் மூன்றாவது எலிமினேட்டர் போட்டியில், பாட்னா பைரேட்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கு முந்தைய தகுதிச் சுற்றுக்கு முன்னேறும்.