டெல்லி : மும்பை அணியின் இளம் நட்சத்திர வீரர் திலக் வர்மா இதுவரை 6 அரைசதங்கள் அடித்துள்ள நிலையில், 6 முறையும் மும்பை அணி தோல்வியை சந்தித்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய பிரேசர் மெக்கர்க் 27 பந்துகளில் 6 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 84 ரன்களை விளாசி தள்ளினார்.

இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்களை மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது. மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா 32 பந்துகளில் 4 சிக்ஸ், 4 ஃபோர்ஸ் உட்பட 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், முதல் பந்திலேயே திலக் வர்மா ரன் அவுட்டாகினார்.
ரன் அவுட்டான தெரிந்த போது கீழே விழுந்திருந்த திலக் வர்மா, சில நிமிடங்கள் எழுந்திருக்காமல் சோகத்தில் இருந்தார். இதன் பின் தலையை மேலே தூக்காமல் குனிந்தவாறே பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். அவரின் ஆட்டத்தை கண்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டினர். அதேபோல் மும்பை அணியின் சக வீரர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில் மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக தொடக்கம் முதலே விளையாடி வரும் திலக் வர்மா, இதுவரை 6 முறை அரைசதம் அடித்துள்ளார். இந்த 6 போட்டிகளிலும் மும்பை அணி ஒருமுறை கூட வென்றதில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனால் திலக் வர்மா மீது அதிர்ஷ்டமில்லாத வீரர் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. வழக்கமாக மும்பை அணியின் பேட்டிங் வரிசையில் நிலையான இடம் திலக் வர்மாவுக்கு இல்லை. இதனால் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தால், உடனடியாக திலக் வர்மா களமிறக்கப்படுவார். ஒருவேளை தொடக்கம் நன்றாக இருந்தாலும், அன்றைய ஆட்டத்தில் திலக் வர்மாவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலை தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.