மொஹாலி: டி20 கிரிக்கெட்டில் 56 டாட் பந்துகளை ஆடும் அணி தோல்வியின் பக்கமே நிற்கும் என்று பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். அதேபோல் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்ந்தால், அதற்கேற்ப விளையாடி ரன்களை சேர்க்க பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் தயாராக வேண்டும் என்று தவான் அறிவுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

பஞ்சாப் அணியின் பேட்டிங்கின் போது ராஜபக்சே 26 பந்துகளில் 20 ரன்களும், சாம் கரண் 22 பந்துகளில் 22 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தனர். பவர் பிளே ஓவர்களுக்கு பின் அதிகளவில் டாட் பால்களை பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் ஆடினர். சரியாக சொல்ல வேண்டுமென்றால் பஞ்சாப் அணி ஆடிய 120 பந்துகளில் 56 டாட் பந்துகளை விளையாடியுள்ளது. இந்த 56 டாட் பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தால் கூட குஜராத் அணியை எளிதாக வீழ்த்தி இருக்கலாம்.
ஆனால் விக்கெட்டை காப்பாற்ற நினைத்து பஞ்சாப் அணி குறைந்தபட்ச ஸ்கோரை கூட பதிவு செய்யவில்லை. மறுபக்கம் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் 39 டாட் பந்துகளையே விளையாடினர். பஞ்சாப் அணியோடு ஒப்பிடும் போது குறைந்த டாட் பந்துகளை விளையாடியுள்ளதால், குஜராத் அணி வெற்றிபெற்ற அணியாக உள்ளது. கடைசி ஓவரில் சாம் கரண் சிறப்பாக பந்துவீசியும் ஒரேயொரு பவுண்டரியால் பஞ்சாப் அணி தோல்வியடைந்துள்ளது.
இந்த தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், நாங்கள் குறைந்த ரன்களையே இலக்காக நிர்ணயித்தோம். அதற்கு காரணம், எங்களின் பேட்டிங்கின் தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்தது தான். விக்கெட்டுகளை இழந்த பின், அதனை சரி செய்ய பேட்ஸ்மேன்கள் கற்றுக் கொள்ள வேண்டும். 56 டாட் பந்துகளை விளையாடினால், எந்த அணியாக இருந்தாலும் தோல்வியின் பக்கமே நிற்கும். அதனை மாற்ற பேட்ஸ்மேன்கள் முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.