லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு வந்ததே சாதனை தான் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. 5வது நாளில் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா அணி, 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் ஐசிசி தொடர்களில் 10வது ஆண்டாக இந்திய அணி தோல்வியடைந்து வருகிறது.

அதேபோல் அனைத்து வகையான ஐசிசி தொடர்களையும் வென்ற முதல் அணி என்ற சாதனையையும் ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது. ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே, தோல்விக்கு காரணமாக உள்ளது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய பணித்து சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் முதல் செஷனில் சிறப்பாகவே விளையாடினோம். ஆனால் அடுத்தடுத்து மோசமாக பந்துவீசியதால், ஆட்டத்தின் பிடியை விட்டுவிட்டோம். அதேபோல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களையும் பாராட்ட வேண்டும். ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து டிராவிஸ் ஹெட் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
டெஸ்ட் போட்டியில் கம்பேக் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் நாங்கள் கம்பேக் கொடுத்தோம். வெற்றிக்காக இறுதிவரை போராடினோம். கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடி இருக்கிறோம். இரு இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளது எங்களை பொறுத்தவரை மிகப்பெரிய சாதனை தான். ஆனால் இன்னும் நாங்கள் மேம்பட வேண்டிய தேவைகள் உள்ளது. அதேபோல் நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடியதால் தான், இந்த இடத்தில் நின்று கொண்ட இருக்கிறோம்.
அதனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் எங்களால் இறுதிப்போட்டியில் வெற்றிபெற முடியவில்லை. கடந்த 5 நாட்களாக எங்களுக்கு கிடைத்த ரசிகர்கள் ஆதரவை மறக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் ஒவ்வொரு விக்கெட்டிற்கும், ஒவ்வொரு ரன்னுக்கு எங்களை பாராட்டினார்கள் என்று தெரிவித்தார்.