
நாடு தழுவிய ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் உயிர்கள் பலியான உடனே முழித்துக் கொண்டது இந்திய அரசு. உடனடியாக செயல்பட்டு நாடுமுழுவதும் 21 நாள் ஊரடங்கை கடந்த 24ம் தேதி அறிவித்தது. இதனால் இயல்புவாழ்க்கையை முற்றிலும் தொலைத்தாலும் மக்கள் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். ஆயினும் பல இடங்களில் இயல்புக்கு மாறான நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

தொடர் உரைகள்
கடந்த 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்த பிரதமர் மோடி, இதனால், மக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பது தெரிந்தே இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார். ஆனால் இந்த நெருக்கடியான நேரத்தில் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்த்தினார். மான் கி பாத், இன்று காலை வீடியோ உரை ஆகியவற்றிலும் இதை தொடர்ந்து வலியுறுத்தினார்.

விளையாட்டு வீரர்களுடன் ஆலோசனை
இதனிடையே இந்த நெருக்கடி காலகட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 40க்கும் மேற்பட்டோருடனும் பிரதமர் உரையாற்றினார்.

வீடியோ கால் மூலம் பிரதமர் ஆலோசனை
இந்நிலையில், முன்னாள் வீரர்கள், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், துப்பாக்கி சுடும் வீரர் அபிஷேக் வர்மா உள்ளிட்ட 49 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி வீடியோ கால் மூலம் கொரோனா குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

முக்கியமான ரோல்
விளையாட்டு வீரர்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வீடியோ கால் மூலமான இந்த உரையாடலில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பின்பற்ற மக்களை வழிநடத்தவும் அவர் கோரியுள்ளார். மேலும் சங்கல்ப்பம் உள்ளிட்ட 5 'எஸ்'களை பின்பற்ற மக்களை கோரவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











