டெல்லி: ஐபிஎல் சூதாட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், சூதாட்ட புகாரால் 2 வருட தடைக்கு உள்ளாகியுள்ளன. அடுத்த சீசனில்தான் அவை மீண்டும் ஆடத் தயாராகியுள்ளன.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், 'பெட்டிங்'கில் ஈடுபட்ட மூன்று புக்கிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 4ல் நடந்த லீக் போட்டியில் டெல்லி அணி டேர்டெவில்ஸ் அணி, குஜராத் அணி நிர்ணயித்த 209 ரன்கள் என்ற பெரிய இலக்கை 15 பந்துகள் எஞ்யிருந்த நிலையில் எளிதாக எட்டிப்பிடித்தது. குஜராத் வீரர்களின் பவுலிங், ஃபீல்டிங் சிறப்பாக இல்லாதது இதற்கு காரணமாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கைதான புக்கிகள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், இவர்களுடன் குஜராத் அணி வீரர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, முன்பு, 19 வயதுக்கு உட்பட்ட போட்டிகளில் பங்கேற்ற ஒரு வீரர் தான் சூதாட்டத்திற்கு முக்கிய காரணம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
வீரர்களை கண்காணித்து வந்தபோதுதான், இந்த சூதாட்ட விவகாரம் அம்பலமானதாக கூறப்படுகிறது. விரைவிலேயே முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என கூறப்படுகிறது.