
அதிரடி மும்பை
நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக ஆடி ரன் குவித்தது. போலார்டும், ரோஹித் சர்மாவும் பெங்களூர் பந்து வீச்சை பிரித்து மேய்ந்து ரன் குவித்ததால் பெங்களூர் பந்து வீச்சாளர்கள் செம டென்ஷனாக காணப்பட்டனர். கேப்டன் கோஹ்லியும் கூட டென்ஷனாகவே இருந்தார்.

17வது ஓவரில் வெடித்த சண்டை
இந்த நிலையில் 17வது ஓவரில் சண்டை வெடித்தது. சண்டையை ஆரம்பித்து வைத்தவர் ஸ்டார்க். கொதித்துக் கொந்தளித்தவர் போலார்ட்.

பவுன்சர் வீசி சீண்டினார் ஸ்டார்க்
இந்த ஓவரில் போலார்டுக்குப் பந்து வீசிய ஸ்டார்க் ஒரு பந்தை பவுன்சர் வீசினார். அது போலார்ட் தலைக்கு மேல் போனது. சிரமப்பட்டு அதிலிருந்து தப்பினார் போலார்ட். இதையடுத்து போலார்டைப் பார்த்து கோபத்துடன் ஏதோ கூறினார் ஸ்டார்க். அதை போலார்ட் கண்டு கொள்ளவில்லை. கையை மட்டும் அசைத்து அமைதியானார்.

வேண்டும் என்றே பந்தைப் போட்ட ஸ்டார்க்
அடுத்த பந்தை ஸ்டார்க் வீச வந்தபோது போலார்ட் திடீரென விலகிக் கொண்டார். பேட் செய்யும் வீரர் இப்படி விலகினால் பந்து வீச்சாளர் பந்து வீசக் கூடாது. இதுதான் முறை.. ஆனால் ஸ்டார்க்கோ விடவில்லை. மாறாக, போலார்டை நோக்கி அதி வேகமாக பந்தை வீசினார்.

கொந்தளித்த போலார்ட்
இதை எதிர்பார்க்காத போலார்ட் விலகிக் கொண்டார். அதே வேகத்தில் கடும் கோபத்துடன் கொந்தளித்தபடி தனது கையில் இருந்த பேட்டை ஸ்டார்க்கை நோக்கி வேகமாக வீசினார். அது வந்த வேகத்தில் ஸ்டார்க் மீது பட்டிருந்தால் பெரும் காயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக பேட் கை நழுவி போலார்ட் முன்பே விழுந்தது.

முறைத்துப் பார்த்தபடி விரைந்த போலார்ட்
பேட்டை வீசிய போலார்ட் கடும் கோபத்துடன் ஸ்டார்க்கை நோக்கி முறைத்தபடி கோபமாக நடந்து வந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. பின்னர் அம்பயர்களும் விரைந்து வந்தனர். அவர்களிடம் முறையிட்டார் போலார்ட்.

அமைதிப்படுத்திய கெய்ல்
பெங்களூர் கேப்டன் கோஹ்லியோ, ஸ்டார்க்குக்கு ஆதரவாக நடுவர்களிடம் பேசினார். அவர்களோ கோஹ்லியை எச்சரித்தனர். இந்த நிலையில் கோபத்துடன் காணப்பட்ட போலார்டை, சக மேற்கு இந்திய தீவுகள் அணி வீரரும் பெங்களூர் வீரருமான கிறிஸ் கெய்ல் விரைந்து வந்து தட்டிக் கொடுத்து பேசி அமைதிப்படுத்தினார். அப்படியும் போலார்ட் முகத்தில் கோபம் குறையவில்லை.

ஸ்டார்க்காலேயே அவுட்டானார் போலார்ட்
சண்டை முடிந்து அமைதி திரும்பிய பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில பந்துகளில் ஸ்டார்க்கால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார் போலார்ட்.

பெங்களூருக்கு செம அடி
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியே வென்றது. முன்னதாக போலார்டும், ரோஹித் சர்மாவும் சேரந்து 97 ரன்களைக் குவித்தனர். இதுதான் பெங்களூரை டென்ஷனாக்கி விட்டது போலும்.


Click it and Unblock the Notifications











