கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நடுவரின் முடிவை மேல் முறையீடு செய்யும் டிஆர்எஸ்-ல் சென்னை அணியின் வெற்றி விகிதம் 85.71 என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் சிஎஸ்கே கேப்டன் தோனியை பாராட்டி வருகின்றனர்.
16வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் விளையாடின. இதில் சென்னை அணி நிர்ணயித்த 236 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல், கொல்கத்தா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் காரணமாக சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொல்கத்தா அணியின் பேட்டிங்கின் போது 17வது ஓவரை சென்னை அணியின் துஷார் தேஷ்பாண்டே வீசினார். அதனை கேகேஆர் அணியின் டேவிட் வீஸ் எதிர்கொண்டார். அந்த ஓவரின் 3வது பந்தில் டேவிட் வீஸ்-ன் பேடில் பந்து பட்டு தோனியிடம் சென்றது. இதனை சென்னை அணி வீரர்கள் விக்கெட் என்று நடுவரிடம் அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் நிதின் மேனன் விக்கெட் இல்லை என்று கூறி, அவுட் கொடுக்க மறுத்தார்.
இதன் காரணமாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி நடுவரின் தீர்ப்பை மேல் முறையீடு செய்தார். டிஆர்எஸ் முறையீட்டில் மூன்றாம் நடுவர் சென்னை அணிக்கு சாதகமாக அவுட் என்று தீர்ப்பளித்தார். இதன் மூலம் டிஆர்எஸ் என்பது Decision ரிவ்யூ சிஸ்டம் அல்ல, தோனி ரிவ்யூ சிஸ்டம் என்பது நிரூபிக்கப்பட்டது. இதனை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இந்த நிலையில் டிஆர்எஸ் மேல்முறையீட்டில் சென்னை அணிக்கு சாதகமாக 85.71 சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி அப்பீல் செய்த 85.71% டிஆர்எஸ் முறையீடுகள், சென்னை அணிக்கு சாதகமாக வந்துள்ளது. வேறு எந்த அணிக்கும் டிஆர்எஸ் மேல்முறையீட்டில் இவ்வளவு சதவிகிதம் வெற்றி கிடைக்கவில்லை.
இதற்கு சென்னை அணியின் கேப்டன் தோனியே காரணம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் பந்துவீச்சாளர்கள் மேல்முறையீடு செல்வதற்கு கோரிக்கை வைக்கும் போது, கேப்டன் தான் அதற்கான முடிவை நடுவரிடம் கூற வேண்டும். பெரும்பாலும் கேப்டன் விக்கெட் கீப்பர்களின் உதவியை தான் நாடுவார்கள். ஆனால் சென்னை அணிக்கு கேப்டன், விக்கெட் கீப்பர் இருவருமே ஒரே ஆள் தான் என்பதால், தோனிக்கு எளிதாக கைகூடி வருகிறது.