பிளே ஆப் போகாம நாங்க தோற்க இந்த 2 பேர் காரணம்… கெயில், ராகுலை கைகாட்டும் அஸ்வின்
மொகாலி:கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தோற்றுபோக கெயிலும், ராகுலும் தான் காரணம் என்று பஞ்சாப் கேப்டன் அஸ்வின் குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஐபிஎல் டி20 லீக்கின் 52 -வது போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
அதில் கே.எல்.ராகுல் 2 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 14 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த மய்ங்க் அகர்வால் மற்றும் நிகோலஸ் பூரன் கூட்டணி நிதானமாக ஆட ஆரம்பித்தது. மயங்க் அகர்வால் 36 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார்.

கொல்கத்தா வென்றது
கடைசியாக களமிறங்கிய சாம் கர்ரன் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பிளே ஆப் சுற்று நழுவியது
அதில் அதிகபட்சமாக சுபமன் கில் 65 ரன்களும், கிறிஸ் லின் 46 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை கொல்கத்தா பெற்றுள்ளது. ஆனால், பஞ்சாப் அணியோ தோல்வியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து நிற்கிறது.

இருவரும் ஏமாற்றினர்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது: நம்பிக்கை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கெயில் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் எங்களை ஏமாற்றி விட்டனர். அதன்பிறகு, பூரன் மற்றும் சாம் கர்ரன் இருவரும் அணிக்கு நம்பிக்கை அளித்தனர்.

பீல்டிங்கும் படுமோசம்
அதற்கு முன்பாக 180 ரன்களை நாங்கள் கட்டுப்படுத்தி இருக்கிறோம். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என நினைக்கிறேன். கில் மற்றும் லின் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். பீல்டிங்கில் சில வீரர்கள் சொதப்பினர். அதுவே போட்டியில் தோல்வியடைய காரணம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications