வெலிங்டன்: உலககோப்பை போட்டியின் 4-வது மற்றும் கடைசி காலிறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகின்றன. லீக் ஆட்டங்கள் முடிவடைந்து காலிறுதிப் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன.
நியூசிலாந்தின் வெலிங்கடனில் தற்போது நடைபெற்று வரும் 4வது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்தும் மேற்கிந்திய தீவுகளும் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச அழைக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து 7-வது முறையாக அரை இறுதியில் நுழையும் ஆர்வத்துடன் உள்ளது. நியூசிலாந்து அணி அனைத்து லீக் ஆட்டங்களிலும் வென்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. 98 ரன்னில் இலங்கையையும், 3 விக்கெட்டில் ஸ்காட்லாந்தையும், 8 விக்கெட்டில் இங்கிலாந்தையும், 1 விக்கெட்டில் ஆஸ்திரேலியாவையும், 6 விக்கெட்டில் ஆப்கானிஸ்தானையும், 3 விக்கெட்டில் வங்கதேசத்தையும் வீழ்த்தியது.
கடந்த 2 உலகக் கோப்பையிலும் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நியூசிலாந்து அணி தற்போது சொந்த நாட்டில் நடைபெறும் போட்டியில் மிகவும் வலுவாக உள்ளது. நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மேற்கிந்திய தீவுகளுக்கு சவாலானது.
2 முறை உலகக் கோப்பையை வென்ற அந்த அணி 1996-ம் ஆண்டுக்கு பிறகு அரை இறுதிக்கு தகுதி பெற்றது கிடையாது. இதனால் நியூசிலாந்தை வீழ்த்த அந்த அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்ப்படுகிறது.
லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளை வென்றது மேற்கிந்திய தீவுகள். இந்தியா. தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளிடம் அந்த அணி தோற்றது.
அயர்லாந்தை விட ரன்ரேட்டில் பெற்ற முன்னிலை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி காலிறுதி வாய்ப்பைப் பெற்றுள்ளது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என்ற சமநிலையில் முடிந்தது. கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோதிய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 203 ரன்களில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டி நடைபெறும் வெலிங்டன் மைதானத்தில் இரு அணிகளும் கடைசியாக மோதிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 2009ஆம் ஆண்டு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் வெல்லும் அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும். அந்த ஆட்டம் வருகிற 24-ந் தேதி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.