இந்திய அணியில் ட்விஸ்ட்.. பும்ராவுக்கு மாற்றாக தேர்வு செய்யப்பட்ட பவுலர்.. பிசிசிஐ முன்னெச்சரிக்கை
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரராக, லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவை பிசிசிஐ தேர்வுக்குழு அடையாளம் கண்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் போட்டிகளில் களமிறங்குவாரா? என்பது தெரியாத நிலை உள்ளது. பும்ரா இன்னும் தனது உடற்தகுதியை நிரூபிக்கவில்லை.
கடந்த ஜூலை 16ல் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது பும்ராவுக்கு முழங்காலில் மீண்டும் காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் எந்த போட்டியிலும் பந்துவீசவில்லை. தற்போது அவரது சிகிச்சை தொடர்ந்து வருகிறது. பும்ரா எப்போது முழுமையாக திரும்புவார் என்பது உறுதியாக தெரியவில்லை. இதனால் பிரின்ஸ் யாதவை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியில் பும்ரா தவிர்த்து சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தொடரில் சேர்க்கப்பட்டுள்ள பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா ஆகியோர் தீவிர உடற்தகுதி சோதனையில் பங்கேற்க உள்ளனர். ஒரு வாரம் நடக்கும் இந்த சோதனையில் முழு உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே செப்டம்பர் 10ல் டில்லியில் இவர்கள் இந்திய அணியுடன் இணைய முடியும். இதில் மாதிரி டி20 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதில் விளையாடி தங்கள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ கூறி உள்ளது.
மறுபுறம், இந்திய வீரர்கள் தொடர்ந்து காயத்தில் சிக்குவது பிசிசிஐ-க்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. பும்ராவை கையாள்வதில் இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து சொதப்புவதாக இந்திய முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் சாடியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து பணிச்சுமை மேலாண்மையில் பிசிசிஐ கவனம் செலுத்தினாலும் எந்த பலனும் இல்லை என அவர் தெரிவித்தார். மருத்துவக் குழு தகவல்களை மட்டுமே தரும் என்றும் கேப்டன், பயிற்சியாளர், தேர்வுக்குழுவினரே முக்கிய முடிவுகளை எடுப்பதால் அவர்களே இதற்கு முழு பொறுப்பு என்றும் பத்ரிநாத் குற்றம் சாட்டினார்.


Click it and Unblock the Notifications


