ப்ரித்வி ஷா உள்ளே
ஏற்கனவே, இந்திய அணியின் துவக்கம் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகவே இருக்கிறது. இந்த நிலையில், ப்ரித்வி ஷாவை, ரோஹித் சர்மாவுடன் இணைந்து துவக்க வீரராக களம் இறக்கி பரிசோதனை செய்ய அணி நிர்வாகம் ஆர்வமாக இருக்கிறது என கூறப்படுகிறது. அதற்கு காரணம், அடுத்து வரும் 2019 உலகக்கோப்பை தொடருக்குள் ப்ரித்வி ஷாவை ஒருநாள் அணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது தான் என கூறப்படுகிறது.
தவான், ரோஹித்தை பாதிக்காதா?
ப்ரித்வி ஷா துவக்க வீரராக களம் இறங்கினால், அது ஏற்கனவே துவக்க வீரர்களாக இருக்கும் தவான், ரோஹித்தை பாதிக்காதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது.
சுழற்சி முறை காரணமா?
பந்துவீச்சில் முக்கிய வீரர்களாக இருக்கும் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு சில தொடர்களில் ஓய்வு அளித்து வருகிறார்கள். காரணம் முக்கிய வீரர்களை, முக்கிய தொடர்களுக்கு எந்த காயமும் இன்றி இடம் பெறச் செய்யும் யுக்தி என கூறப்படுகிறது. அந்த வகையில், அடுத்து துவக்க வீரர்களும் இனி சுழற்சி முறையில் பயன்படுத்தும் முயற்சி தான் இது. இதன் மூலம், முக்கிய வீரர்களான ரோஹித், தவான் ஓய்வு அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. எனினும், இப்படி சுழற்சி முறையில் சில வீரர்கள் வெளியேற்றப்படுவதும் நடக்கிறது.
அணிக்குள் அரசியல்
ஏற்கனவே, ரோஹித் சர்மா மற்றும் தவான் உடன், கோலிக்கு மனக்கசப்பு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. தவான் சமீபத்திலும், ரோஹித் நீண்ட நாட்களாகவும் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதில்லை. அவர்களை அணியில் இருந்து நீக்கியதில் அரசியல் உள்ளது என கூறப்படுகிறது. ப்ரித்வி ஷாவை வைத்து இப்போது இந்த அரசியல் வளர்க்கப்படுகிறதோ என்ற எண்ணம் வருகிறது.
ப்ரித்வி ஷா ஓகே தான்
ப்ரித்வி ஷா நல்ல வீரர் தான். அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு அளித்து பார்க்கலாம். அவர் நன்றாக ஆடினால், அணியில் நிரந்தரமாக ஆட வைக்கலாம். ரோஹித், தவான் இருவரில் யார் அவருக்கு இடம் கொடுப்பார்கள் என்பதை கூட முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அனுபவ வீரர்களே தேவையில்லையா?
தவானை நீக்க முயற்சியா?
தவான் இப்போதும் டாப் பார்மில் தான் இருக்கிறார். எனினும், அவர் இங்கிலாந்தில் சரியாக ஆடாத காரணத்தை காட்டி அடுத்து இங்கிலாந்தில் நடக்க இருக்கும் 2019 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருந்து அவரை நீக்கவே ப்ரித்வி ஷா அணிக்குள் இழுக்கப்படுகிறார் என்ற கருத்தும் உள்ளது.