அதிவேக சதம்.. மிரள வைத்த பிரித்வி ஷா.. ரஞ்சி டிராபியில் வரலாற்று சாதனை.. 72 பந்தில் செஞ்சுரி
சண்டிகர்: ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்ட இளம் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மகாராஷ்டிரா அணிக்காக தனது இரண்டாவது ரஞ்சி டிராபி போட்டியில் களமிறங்கிய அவர், வெறும் 72 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இது ரஞ்சி டிராபி வரலாற்றில் அடிக்கப்பட்ட ஆறாவது அதிவேக சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகரில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில், மகாராஷ்டிரா மற்றும் சண்டிகர் அணிகளுக்கு இடையேயான ரஞ்சிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த பிரித்வி ஷா, இரண்டாவது இன்னிங்ஸில் தனது இயல்பான, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது, 13 பவுண்டரிகளின் உதவியுடன் 72 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார்.

20 மாத வறட்சிக்கு முற்றுப்புள்ளி:
இந்த அதிரடி சதம் மூலம், சுமார் 20 மாத காலமாக சதம் அடிக்க முடியாமல் இருந்த தனது மோசமான ஃபார்முக்கு பிரித்வி ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடைசியாக அவர் பிப்ரவரி 2024-ல் மும்பை அணிக்காக விளையாடியபோது சதம் அடித்திருந்தார்.
பிரித்வி ஷா புதிய அணி:
திறமை இருந்தும், உடற்தகுதி மற்றும் ஒழுங்குப் பிரச்சினைகள் காரணமாக கடந்த ஆண்டு மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டார் பிரித்வி ஷா. அவரது கிரிக்கெட் வாழ்க்கை பெரும் சரிவைச் சந்தித்தது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்திலும் அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
இந்தச் சூழலில், தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்று, மகாராஷ்டிரா அணிக்காக விளையாடத் தொடங்கினார்.
சாதனைகளும், சரிவுகளும்:
தனது இளம் வயதிலேயே உலகின் மிக அற்புதமான இளம் திறமையாளர்களில் ஒருவராகப் பரவலாக மதிப்பிடப்பட்டவர் பிரித்வி ஷா. 2018 ஆம் ஆண்டு இவரது தலைமையிலான இந்திய அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது. தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார்.
இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன் குவிக்கத் தவறியதாலும், ஒழுக்கக் குறைபாடுகளாலும் அணியில் தனது இடத்தை இழந்தார். கடைசியாக ஜூலை 2021-ல் இந்திய அணிக்காக விளையாடினார். தற்போது மகாராஷ்டிரா அணிக்காக அடித்துள்ள இந்த அதிரடி சதம், மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கான ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஞ்சி டிராபியில் அதிவேக சதங்கள்:
- ரிஷப் பண்ட்- 48 பந்துகள் (2016/17)
- ரியான் பராக் - 56 பந்துகள் (2023-24)
- ஆர்.கே. போரா - 56 பந்துகள் (1987/88)
- எஸ். ரூபன் பால் - 60 பந்துகள் (1995/96)
- ரஜத் படிதார் - 68 பந்துகள் (2024-25)
- பிரித்வி ஷா - 72 பந்துகள் (2025-26)
- ஏகலவ்யா திவேதி - 72 பந்துகள் (2015-16)


Click it and Unblock the Notifications