ஹைதராபாத் : புரோ கபடி லீக் 7வது சீசனின் ஆறாம் நாளில் குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் அணி யுபி யுத்தா அணியையும், பாட்னா அணி, தெலுகு டைட்டன்ஸ் அணியையும் வீழ்த்தின.
இன்று (ஜூலை 26) நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் - யுபி யுத்தா அணிகள் மோதின. இதுவரை குஜராத் அணியை வீழ்த்தி இருக்காத யுபி யுத்தா அணி, இந்த முறையாவது வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
எனினும், எதிர்பார்ப்புக்கு மாறாக குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் யுபி யுத்தா அணியின் டிஃபன்ஸ் படுமோசமாக இருந்தது. அதே சமயம், குஜராத் அணியின் டிஃபன்ஸ் கட்டுக் கோப்பாக இருந்தது. அதுவே வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.
யுபி யுத்தா அணி போட்டியின் துவக்கத்தில் 4-4 என சமநிலையில் இருந்தது. அது மட்டுமே இந்தப் போட்டியில் அந்த அணியின் சிறப்பான நிலையாக இருந்தது. அதன் பின் குஜராத் அணி தொடர்ந்து யுபியை விட முன்னிலையில் இருந்தது.
யுபி யுத்தா அணியின் ஒரே நம்பிக்கை ரெய்டர் மோனு கோயாத் தான். ஆனால், அவரை பெரும்பாலும் வெளியே இருக்கும் படி பார்த்துக் கொண்டது குஜராத் அணி. முதல் பாதியில் சுமார் 13 நிமிடங்கள் அவர் அவுட் ஆகி வெளியில் இருந்தார்.
ரோஹித் குலியா, சச்சின் டான்வார் ஆகியோர் சிறப்பாக ரெய்டு செய்து குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். குஜராத் அணி 44 - 19 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் பாட்னா அணி 34 - 22 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்தது. இந்த சீசனில் பாட்னா தன் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
பாட்னா அணியின் டிஃபன்ஸ்-இல் ஜெய்தீப் அபாரமாக செயல்பட்டார். தெலுகு அணியின் நட்சத்திர ரெய்டர்கள் சித்தார்த் தேசாய், சூரஜ் தேசாய் இருவரையும் போட்டியின் பெரும்பாலான நேரம் அவுட் ஆக்கி வெளியே உட்கார வைத்தது பாட்னா அணி. பாட்னா அணியின் ரெய்டில் பர்தீப் நர்வால் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.
இறுதியில் பாட்னா பைரேட்ஸ் 34 - 22 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. தெலுகு அணி தன் சொந்த மண்ணில் ஆடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்து உள்ளது. ஒரு வெற்றி கூட பெறாமல் மோசமான நிலையில் உள்ளது தெலுகு அணி.