மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் 'நவீன சுவர்' என்று அழைக்கப்பட்ட செதேஷ்வர் புஜாரா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் அவருக்குத் தங்களது புகழாரத்தைச் சூட்டி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்ட ஜாம்பவான்கள் புஜாராவின் பங்களிப்பை நினைவுகூர்ந்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
103 டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்களுடன் 7,195 ரன்கள் குவித்த புஜாரா, இந்திய அணியின் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார். அவரது ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் (X) தளத்தில், புஜாராவின் பங்களிப்பைப் பாராட்டி மனதைத் தொடும் பதிவை வெளியிட்டுள்ளார்.
"புஜாரா, நீங்கள் 3-வது வீரராகக் களமிறங்குவதைப் பார்ப்பது எப்போதுமே ஒருவித நிம்மதியையும், நம்பிக்கையையும் கொடுக்கும். ஒவ்வொரு முறையும் நீங்கள் விளையாடும்போது அமைதி, தைரியம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ஆழமான காதலை வெளிப்படுத்தினீர்கள். உங்களது திடமான டெக்னிக், பொறுமை மற்றும் அழுத்தமான சூழல்களில் நிதானத்தைக் கையாளும் விதம் அணிக்கு ஒரு தூணாக இருந்தது."
"பல சிறந்த தருணங்களில், 2018-ல் ஆஸ்திரேலியாவில் நாம் வென்ற டெஸ்ட் தொடர் வெற்றி தனித்து நிற்கிறது. உங்களின் நம்பமுடியாத மன உறுதி மற்றும் மேட்ச்-வின்னிங் ரன்கள் இல்லாமல் அந்த வெற்றி சாத்தியமில்லை. அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். உங்களின் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக அமையட்டும்!" என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், புஜாராவின் அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார். "எப்போதும் தனது மனம், உடல் மற்றும் ஆன்மாவை நாட்டிற்காகக் கொடுத்த ஒருவர்! சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கைக்காக எனது வாழ்த்துக்கள் புஜி! மறுபக்கத்தில் சந்திப்போம்!" என்று யுவராஜ் கூறியுள்ளார்.
புஜாராவின் மன உறுதியை விவிஎஸ் லட்சுமண் வெகுவாகப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கப்பா டெஸ்ட் வெற்றியை அவர் நினைவுகூர்ந்தார்.
"நான் புஜாராவை முதன்முதலில் பார்த்தபோதே, அவரது திறமை வெளிப்படையாகத் தெரிந்தது. அந்தத் திறமை இத்தகைய சிறப்பான ஆட்டங்களாக மாறியதைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளித்தது. அவரது தைரியம், விடாமுயற்சி மற்றும் உறுதிப்பாடு எப்போதும் தனித்து நிற்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க காபா டெஸ்ட் வெற்றியில், அவர் தனது உடலில் வாங்கிய அடிகள், ஒரு கிரிக்கெட் வீரராக புஜாராவைச் சரியாக அடையாளப்படுத்துகிறது - நாட்டிற்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கும் ஒருவர். சிறப்பாகச் செய்தீர்கள் புஜாரா, உங்களின் இரண்டாவது இன்னிங்ஸ் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் அமைய வாழ்த்துக்கள்" என்று லட்சுமண் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது வீரராகக் களமிறங்கி அதிக ரன்கள் (6,488) குவித்த வீரர்கள் பட்டியலில், ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக புஜாரா இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.