கவுகாத்தி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்ட நிலையில், சாம் கரண் அந்த ஓவரில் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி ஷிகர் தவான் 86* மற்றும் பிரப்சிம்ரன் சிங்கின் 60 ரன்களால் 197 ரன்கள் குவித்தது. இதையடுத்து 198 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் செய்து வருகிறது. 198 ரன்கள் இலக்கு என்பதால், ராஜஸ்தான் அணி பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் பட்லர் வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி தொடக்க வீரர் பட்லருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்கினார். எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அணி நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து முதல் பந்திலேயே சிக்சர் விளாசி இன்னிங்ஸை தொடங்கிய ஜெய்ஸ்வால், 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் அஸ்வினும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பட்லர் - சாம்சன் ஜோடி அதிரடியை தொடங்கியது. இதனிடையே எதிர்பாராவிதமாக பட்லர் 19 ரன்களில் ஆட்டமிழக்க, மொத்த பாரமும் சாம்சன் தலையில் விழுந்தது. பின்னர் வந்த படிக்கல், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் குறைந்தது. இந்த பிரஷர் காரணமாக சஞ்சு சாம்சன் சிக்சர் அடிக்க முயற்சித்த போது, 42 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் வந்த உள்ளூர் வீரரான ரியான் பராக் அதிரடியாக சில சிக்சர்களை விளாசினார். ஆனால் அவரும் 20 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் 26 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இறுதியாக ராஜஸ்தான் அணி வெற்றிபெற 18 பந்துகளில் 53 ரன்கள் அடிக்க வேண்டிய தேவை எழுந்தது.
களத்தில் ராஜஸ்தான் அணியின் ஹெட்மயர் - ஜுரேல் கூட்டணி இருந்தது. 18வது ஓவரை வீசிய சாம் கரண் பந்துவீச்சில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் ராஜஸ்தான் வெற்றிக்கு 12 பந்துகளில் 34 ரன்கள் அடிக்க நிலை வந்தது. பின்னர் 19வது ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை ஏற்பட்டது. அதனை வீச சாம் கரண் அழைக்கப்பட்டார். அதில் முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில், ஹெட்மயர் 36 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் கடைசி 3 பந்தில் 12 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இளம் வீரர் துருவ் ஜுரேல் சாம் கரணை எதிர்கொண்டார். ஆனால் அடுத்த 3 பந்தில் ரன்களை 6 மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக ஆடிய ஜுரேல் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.