டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை.. பஞ்சாப் கிங்ஸ் செய்த சேஸிங் ரெக்கார்டு இதுதான்
டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 265 ரன்கள் என்ற இமாலய இலக்கை மிக எளிதாக சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. கேஎல் ராகுல் தனி ஒருவராக 152 ரன்கள் குவித்து படைத்த சாதனையையும், டெல்லி அணியின் பிரம்மாண்ட ஸ்கோரையும் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் தவிடுபொடியாக்கிய விதம் கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளது. ஒரு டி20 போட்டியில் இவ்வளவு பெரிய இலக்கை சேஸிங் செய்ய முடியுமா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பஞ்சாப் அணி நிஜமாக்கியுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 67 பந்துகளில் 152 ரன்கள் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெய்ல் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோருக்குப் பிறகு 150 ரன்களைக் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை ராகுல் பெற்றார். அவர் ராணாவுடன் இணைந்து 220 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.

பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நினைத்துப்பார்க்க முடியாத இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஜோடி சூறாவளி தொடக்கத்தை அளித்தது. இந்த ஜோடி வெறும் 42 பந்துகளில் 126 ரன்கள் குவித்து டெல்லி பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது. பிரப்சிம்ரன் 76 ரன்களும், பிரியான்ஷ் 73 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன்பின் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பாகவும் அதேசமயம் அதிரடியாகவும் விளையாடி 36 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். முடிவில் பஞ்சாப் அணி இன்னும் 7 பந்துகள் மீதமிருக்கையிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 265 ரன்கள் எடுத்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 49 பவுண்டரிகளும் 33 சிக்சர்களும் பறந்தன. பந்துவீச்சாளர்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் தவித்த நிலையில் ஆட்டத்தில் வெறும் 6 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவே மிக அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸிங் ஆகும். முன்னதாக 2024ல் கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் அணியே 262 ரன்கள் இலக்கை சேஸிங் செய்ததே முந்தைய சாதனையாக இருந்தது. சர்வதேச அளவில் 2023ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 259 ரன்களை சேஸிங் செய்திருந்தது. தற்போது அனைத்து உலக சாதனைகளையும் பஞ்சாப் அணி முறியடித்துள்ளது. நடப்பு சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளிலும் தோல்வியையே சந்திக்காத பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications
