மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற 154 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குஜராத் அணி தரப்பில் அனுபவ வீரர் மோகித் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
16வது ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மொஹாலி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி ஸ்கோரே 186 ரன்கள் என்பதால், ஹர்திக் பாண்டியா சேஸிங்கை தேர்வு செய்ததாக பார்க்கப்பட்டது. அதேபோல் குஜராத் அணி சார்பாக இளம் வீரர் யாஷ் தயாள் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் மோகித் சர்மா சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி சார்பாக ஷிகர் தவான் - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி களமிறங்கியது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாகி வெளியேற, அவரைத் தொடர்ந்து கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் மேத்யூ ஷார்ட் அதிரடியால் பஞ்சாப் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் சேர்த்தது. பின்னர் ரஷித் கான் பந்துவீச்சில் ஷார்ட் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணியின் ரன் குவிப்பு குறைந்தது. ஓவருக்கு 6 ரன்கள் எடுப்பதே பெரிய விஷயமாக மாறியது. இதனால் போட்டியை டிவியில் பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், மைதானத்தில் இருந்த ரசிகர்களுமே தூங்கி இருப்பார்கள். 10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்து விளையாடியது. 10 ஓவருக்கு பின் அதிரடிக்கு பஞ்சாப் வீரர்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பில் ராஜபக்சே மண்ணை அள்ளி போடும் வகையில் சிங்கிள் கூட ஆடுவதில் தடுமாறினார்.
மறுபக்கம் ஜித்தேஷ் சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சாம் கரண் களமிறக்கப்பட்டார். அவராவது அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் ரசிகர்களை சோதித்தார். ஒரு கட்டத்தில் கடைசியாக எப்போது பவுண்டரி அடிக்கப்பட்டது என்பதே மறந்துபோனது. 15 ஓவர்களில் 99 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி சேர்த்திருந்தது. பின்னர் சாம் கரண் ஒரு சிக்சர் அடிக்க, மறுபக்கம் 16வது ஓவரில் ராஜபக்சே 26 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து தமிழக வீரர் ஷாரூக் கான் எதிர்கொண்ட முதல் பந்திலேயெ சிக்சர் விளாசி திரும்பி பார்க்க வைத்தார். 17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 121 ரன்களோடு விளையாடி வந்தது. இதையடுத்து ஷமி வீசிய 18வது ஓவரில் சாம் கரண் ஒரு பவுண்டரி அடிக்க, ஷாரூக் கான் மீண்டும் ஒரு சிக்சர் அடித்து அந்த ஓவரில் 15 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து சாம் கரணும் 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடிய ஷாரூக் கான் ரன்கள் சேர்த்தார்.